இலங்கை அணி, இங்கிலாந்து லயன்ஸ் அணியிடம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருப்பது இலங்கை ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. இங்கிலாந்து சென்றுள்ள இலங்கை அணி அங்கு 3 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இங்கிலாந்து மற்றும் இலங்கை அணி களுக்கிடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி வருகின்ற 21ஆம் தேதி மான்செஸ்டர் நகரில் அமைந்துள்ள ஓல்டு ட்ராப்போர்ட் மைதானத்தில் வைத்து நடைபெற இருக்கிறது.
இந்நிலையில் டெஸ்ட் போட்டிகளுக்கு தயாராகும் விதமாக இலங்கை அணி, இங்கிலாந்து லயன்ஸ் அணியுடன் 4 நாட்களை கொண்ட பயிற்சி போட்டியில் விளையாடியது. இந்தப் போட்டி கடந்த 14ஆம் தேதி தொடங்கியது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி இங்கிலாந்து அணியின் இளம் பந்துவீச்சாளர்களை தாக்குப் பிடிக்க முடியாமல் 139 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து லயன்ஸ் அணியின் வேக பந்து வீச்சாளர் ஜமான் அக்தர் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸ் ஆடிய இங்கிலாந்து லயன்ஸ் அணி 324 ரன்கள் குவித்தது. அந்த அணியின் வீரர் ஹம்சா ஷேக் சிறப்பாக விளையாடி 91 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதனால் இங்கிலாந்து லயன்ஸ் அணி 185 ரன்கள் முன்னிலை பெற்றது. இதனைத் தொடர்ந்து தங்களது இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இலங்கை 306 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இலங்கை அணியின் துவக்க வீரர் நிஷாந் மதுஷங்க்கா 77 ரன்களும் தனஞ்செயா டிசில்வா 66 ரன்களும் எடுத்தனர். மேலும் முன்னால் கேப்டன் ஏஞ்சலோ மேத்யூஸ் 51 ரன்கள் குவித்தார்.
இதனைத் தொடர்ந்து 122 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து லயன்ஸ் அணியினர் அதிரடியாக விளையாடி 26.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 122 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றனர். அந்த அணியின் துவக்க வீரர் ராபர்ட் ஏட்ஸ் சிறப்பாக விளையாடி 57 ரன்கள் உடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். மற்றொரு துவக்க வீரரான 19 வயது பென் மெக்கிண்ணி 9 பந்துகளில் 3 பவுண்டரி மற்றும் 1 சிக்சருடன் 20 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
முதல் இன்னிங்சில் சிறப்பாக ஆடிய ஹம்சா ஷேக் 16 ரன்களில் அவுட் ஆனார். இதனைத் தொடர்ந்து களம் இறங்கிய ஜேம்ஸ் ரேவ் மற்றும் துவக்க வீரர் ராபர்ட் ஏட்ஸ் ஆகியோர் இங்கிலாந்து லயன்ஸ் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இங்கிலாந்து லயன்ஸ் அணியுடன் இலங்கை அணி பெற்ற இந்த தோல்வி கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. இந்தப் பயிற்சி போட்டிக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இளம் வீரர்களை கொண்ட அணியை ஆட வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை அணிக்கு எதிராக விளையாடிய இங்கிலாந்து லயன்ஸ் அணியில் வீரர்களின் அதிகபட்ச வயது 25 ஆக இருந்தது. இவ்வாறான இளம் அணியினர் இலங்கை சீனியர் டீமை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைய செய்திருக்கின்றனர். மேலும் 2 இன்னிங்ஸிலும் இங்கிலாந்து லயன்ஸ் அணியின் இளம் வீரர்கள் தங்களது சீனியர் அணியை போல டெஸ்ட் போட்டியில் அதிரடியான ஆட்டத்தை கடைப்பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியுடன் நடைபெற்ற ஒரு நாள் போட்டி தொடரை 27 ஆண்டுகளுக்குப் பின் இலங்கை அணி கைப்பற்றியது. இதனால் அந்த அணி மீண்டும் சாம்பியன் அணியாக உருவெடுக்கும் என இலங்கை ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருந்தனர். இந்த நிலையில் இலங்கை டெஸ்ட் அணி இளம் வீரர்களைக் கொண்ட இங்கிலாந்து லயன்ஸ் அணியிடம் தோல்வியை சந்தித்து இருப்பது அந்நாட்டு ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.

