தற்போதைய 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது . உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் அரை இறுதி போட்டிகளை நெருங்கி இருக்கும் வேலையில் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் விளையாடும் அணிகள் எவை அரை இறுதியில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற பரபரப்பு ரசிகர்களிடமும் கிரிக்கெட் விமர்சகர்களிடமும் ஏற்பட்டிருக்கிறது.
இந்நிலையில் இந்தியாவின் உள்நாட்டு டி20 போட்டியான செய்த அலி முஸ்தாக் ட்ராபி கிரிக்கெட் போட்டிகள் சமீபத்தில் முடிவடைந்தன. இதில் பஞ்சாப் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதனைத் தொடர்ந்து அந்த அணியின் முக்கிய வீரரும் இந்திய அணியில் இடம் பெற்ற வீரருமான ஆல் ரவுண்டர் குர்கீரத் சிங் மான் திடீரென அனைத்து வடிவ கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் தனது ஓய்வை அறிவித்திருக்கிறார்.
இவர் ஒரே நேரத்தில் உள்நாடு மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாகவும் அறிவித்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருக்கும் இவர் ” இன்றோடு என்னுடைய அற்புதமான கிரிக்கெட் பயணத்தை முடித்துக் கொள்கிறேன். இந்திய அணிக்காக விளையாடியதை பெரும் வெகுமதியாகவும் கௌரவமாகவும் கருதுகிறேன். என்னுடைய குடும்ப உறுப்பினர்கள் நண்பர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் ஆகியோர் இத்தனை காலமும் எனக்கு வழங்கிய ஆதரவை நினைத்து எனது உள்ளம் நன்றியால் நிரம்பி இருக்கிறது. ஒவ்வொருவரும் என்னுடைய கிரிக்கெட் கேரியரில் முக்கியமாக இருந்தனர்” என பதிவிட்டு இருக்கிறார்.
மேலும் தொடர்ந்து பதிவிட்டு இருக்கும் அவர் ” இந்த நேரத்தில் பிசிசிஐ மற்றும் பஞ்சாப் கிரிக்கெட் வாரியம் ஆகியோருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் . என்னுடைய இத்தனை வருட கிரிக்கெட் வாழ்வில் எனக்கு ஆதரவும் பயிற்சியும் அறிவுரைகளும் வழங்கி இன்று நான் கிரிக்கெட்டில் சாதித்த விஷயங்களுக்கு அவர்கள் பெரும் உறுதுணையாக இருந்தனர்” என உருக்கமுடன் பதிவிட்டுள்ளார் அவர். 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சிகே நாயுடு கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் பஞ்சாப் அணி வெற்றி பெறுவதற்கு இவரது பேட்டிங் உறுதுணையாக இருந்தது.
அதன் மூலம் இந்திய அளவில் கவனிக்கப்பட்ட இவர் 2015-16 ஆண்டு ரஞ்சி டிராபி போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மேலும் அந்த சீசனில் ஒரு இரட்டை சதமும் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சுழற் பந்துவீச்சு ஆல்ரவுண்டரான இவர் தென்னாப்பிரிக்கா அணியின் இந்திய சுற்றுப்பயணத்தின் போது டெஸ்ட் அணியில் இடம் பெற்று இருந்தார். எனினும் ஆடும் லெவனில் இடம்பெறவில்லை. 2016 ஆம் ஆண்டு இந்திய அணியின் ஆஸ்திரேலிய சுற்று பயணத்தின் போது மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாடியிருக்கிறார். பேட்ஸ்மேன் ஆக மட்டுமல்லாது ஆப் ஸ்பின் சுழற் பந்துவீச்சாளராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை இந்திய அணிக்காக மூன்று ஒரு நாள் போட்டிகளில் ஆடி இருக்கும் இவர் 13 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார். மேலும் இந்த மூன்று ஒரு நாள் போட்டிகளிலும் 10பவர்கள் பந்து வீசி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விக்கெட்டுகள் எதுவும் வீழ்த்தவில்லை. ஆஸ்திரேலிய தொடரின் மோசமான ஆட்டத்தை தொடர்ந்து இவருக்கு வாய்ப்புகளும் வழங்கப்படவில்லை. முதல் தரப் போட்டிகளில் 59 போட்டிகளில் விளையாடியிருக்கும் இவர் 3471 ரன்கள் எடுத்திருக்கிறார். இதில் 7 சதங்களும் 20 அரை சதங்களும் அடங்கும். முதல் தரப் போட்டியில் இவரது அதிகபட்ச ஸ்கோர் 201. 59 முதல் தரப் போட்டிகளில் 55 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார். இவரது சிறப்பான பந்துவீச்சு 38 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகள் வீழ்த்தியது ஆகும்.
ஐபிஎல் தொடர்களில் இவர் இதுவரை கிங்ஸ் லெவன் பஞ்சாப் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் டெல்லி டேர்டெவில் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகளுக்காக விளையாடியிருக்கிறார். 2022ஆம் ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம் பெற்று இருந்தார். எனினும் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. இதுவரை 41 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியிருக்கும் இவர் 511 ரன்கள் எடுத்திருக்கிறார். இதில் இரண்டு அரை சதங்கள் அடங்கும். இவரது ஐபிஎல் அதிகபட்ச ஸ்கோர் 65 ஆகும்.
சமீபகாலமாக இவருக்கு பஞ்சாப் அணியிலும் தொடர்ச்சியான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. இதன் காரணமாகவே 33 வயதிலேயே தனது ஓய்வு முடிவை எடுத்திருக்கிறார் குர்கீரத் சிங் மான். இந்த ஓய்வு முடிவின் காரணமாக இவரால் வெளிநாட்டில் நடைபெறும் டி20 லீக் போட்டிகளில் பங்கேற்று விளையாட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் ஓய்வு முடிவை அறிவித்த ராயுடு வெஸ்ட் இண்டீஸ் பிரிமியர் லீக்கில் பங்கேற்று விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

