கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகச் சிறப்பாக விளையாடி 28 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை தோற்கடித்தது.
இந்த போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றிருந்தாலும் மகேந்திர சிங் தோனி ஒன்பதாவது இடத்தில் களமிறங்கி விளையாடியது சிறிய சர்ச்சையானது. ஒன்பதாவது இடத்தில் இறங்கி விளையாடுவதற்கு விளையாடாமல் இருந்திருக்கலாம் என்று ஹர்பஜன் சிங் உட்பட முன்னாள் வீரர்கள் பலரும் மகேந்திர சிங் தோனியை விமர்சித்தனர்.
ஆனால் அதற்கு முன்னரே மகேந்திர சிங் தோனி கடந்த ஆண்டு செய்து கொண்ட அறுவை சிகிச்சையின் காரணமாகவே கடைசியாக களமிறங்கி குறைந்த பந்துகளை எதிர்கொண்டு விளையாடுகிறார் என்று சிஎஸ்கே தரப்பில் இருந்து விளக்கமளிக்கப்பட்டது. இருந்தாலும் தற்போது அவருக்கு இருக்கும் மற்றொரு பிரச்சனை குறித்து சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்திருக்கிறது.
கடந்த போட்டியில் பதினாறு ஓவர்களில் சென்னை அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் குவித்து தத்தளித்துக் கொண்டிருந்த போது தோனி களமிறங்கி விளையாடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் அப்போது ஏமாற்றம் அளிக்கும் விதமாக சர்துல் தாக்கூர் களம் இறங்கி விளையாடினார். அவர் சிறிது நேரம் அதிரடியாக விளையாட சென்னை அணியின் ஸ்கோர் சற்று உயர்ந்தது.
மேலும் அவரும், சில பேட்ஸ்மேன்களும் அவுட் ஆகி வெளியேறிய பிறகு 19 ஆவது ஓவரில் ஒன்பதாவது விக்கெட்டாக மகேந்திர சிங் தோனி களம் இறங்கினார். ஹர்சல் பட்டேலின் பந்துவீச்சில் போல்டாகி வெளியேற, இப்படி ஒன்பதாவது இடத்தில் களமிறங்கி விளையாடுவதற்கு மகேந்திர சிங் தோனி போட்டியில் விளையாடாமல் இருந்திருக்கலாம் என்று ஹர்பஜன் சிங் உட்பட பல முன்னாள் வீரர்கள் அவரை விமர்சித்தனர்.
இந்த நிலையில் தற்போது அவர் கடைசியாக களம் இறங்கி விளையாடியதற்கான காரணம் சென்னை அணித் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மகேந்திரசிங் தோனி கடைசியாக களமிறங்கி விளையாட அவருக்கு ஏற்பட்டிருக்கும் தசைநார் கிழிவுதான் காரணம் என்று சொல்லப்படுகிறது. இந்த சீசனின் தொடக்கப் போட்டிகளில் லேசாக இருந்த அந்த காயம் தற்போது பெரிதாகி உள்ளது.
இதனை பரிசோதித்த மருத்துவர்கள் அவரை எஞ்சிய போட்டிகளில் விளையாட வேண்டாம் என்று அறிவுறுத்திய போதிலும், மகேந்திர சிங் தோனி தனது ரசிகர்களுக்காக காயத்தையும் பொருட்படுத்தாது தற்போது போட்டிகளில் விளையாடி வருகிறாராம். இந்த ரசிகர்களுக்காக மனிதன் மிகவும் சிரமப்படுகிறார் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கூறி வருகின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இன்னும் மூன்று லீக் போட்டிகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

