17 வது ஐபிஎல் சீசன் வருகிற மார்ச் மாதம் 22ஆம் தேதி கோலாகலமாகத் தொடங்க உள்ளது. இதன் தொடக்கப் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பலம் வாய்ந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதுகின்றன.
இத்தொடருக்காக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் மற்றும் உள்நாட்டு வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை அணியின் வெற்றிகரமான கேப்டன் எம் எஸ் தோனி வருகிற மூன்றாம் தேதி சேப்பாக்கத்தில் தனது பயிற்சியை மேற்கொள்ள உள்ளார்.
இந்நிலையில் டிசம்பர் மாதம் நடைபெற்ற ஏலத்தில் சென்னை அணி திறமையான வீரர்களை எடுத்து அணியை மேலும் பலப்படுத்தியது. நியூசிலாந்து அணி வீரர்களான ரச்சின் ரவீந்திரா மற்றும் டாரி மிச்சல் ஆகியோரை ஏலத்தில் எடுத்தது மட்டுமில்லாமல் இந்திய இளம் வீரரான சமீர் ரிஸ்வியை 8 கோடிக்கு ஏலம் எடுத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
ஏலம் முடிந்து சில நாட்கள் ஆகியும் அனைவரது பார்வையும் சமீர் ரிஸ்வியின் மீதே இருந்தது. எனவே அவரது அதிரடியைக் காண கிரிக்கெட்டைச் சேர்ந்த பிரபலங்களும் மற்றும் ரசிகர்களும் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் தற்போது கேனல் சி கே நாயுடு கோப்பையில் முச்சதம் அடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
கர்னல் சி கே நாயுடு டிராபி என்பது பல்வேறு மாநிலங்கள் மற்றும் கிரிக்கெட் சங்கங்களுக்கு இடையே நடைபெறும் 23 வயதுக்குட்பட்டோருக்கான உள்நாட்டு போட்டியாகும். இதில் உத்தரப் பிரதேச அணிக்காக விளையாடி வரும் சமீர் ரிஸ்வி அந்த அணியின் கேப்டன் ஆகவும் பதவி வகிக்கிறார். சவுராஷ்டிரா அணிக்கு எதிரான போட்டியில் 184-3 என்ற நிலையில் இருந்த போது நம்பர் 5ல் களமிறங்கி சௌராஷ்ட்ரா பவுலர்களை அடித்து நொறுக்கியுள்ளார்.
மைதானத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அடித்து நொறுக்கிய சமீர் ரிஸ்வி 165 பந்துகளில் தனது இரட்டை சதத்தினைப் பதிவு செய்தார். அதோடு பின் வாங்காமல் தனது ஆக்ரோஷமான பேட்டிங்கை வெளிப்படுத்தி 261 பந்துகளில் தனது முச்சதத்தைப் பதிவு செய்தார். இறுதியாக 266 பந்துகளில் 33 பவுண்டரி, 12 சிக்ஸர்களுடன் 312 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார்.
அவரது இந்த பேட்டிங் ஃபார்ம் சிஎஸ்கே அணிக்கு தற்போது நல்ல செய்தியாகப் பார்க்கப்படுகிறது. அம்பத்தி ராயிடுவுக்கு பதிலாக சரியான வீரராக இருப்பார் என்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இவர் 11 டி20 போட்டிகளில் விளையாடி 295 ரன்கள் குவித்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் தனது பேட்டிங் சராசரி 49 ஆக வைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே அவரது இந்த அதிரடியை ஐபிஎல்லிலும் காண ரசிகர்கள் ஆர்வமுடன் தயாராகி வருகின்றனர்.