ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா விரைவாக துவங்க உள்ள நிலையில் கடந்த ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சாம்பியன் கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தது. இந்த சூழ்நிலையில் தற்போது ஆர்சிபி அணியோடு இணைந்துள்ள விராட் கோலி சக வீரர்களுக்கு அறிவுரை கூறும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் விராட் கோலி வீரர்களுக்கு உற்சாகம் அளிக்கக் கூடிய சில விஷயங்களை பேசி இருக்கிறார்.
கடந்த ஆண்டு முதல் முறையாக கோப்பையை கைப்பற்றி இருக்கும் பெங்களூர் அணி இரண்டாவது முறையாக கைப்பற்றுவதற்கு பலத்த போட்டி போடும். அதேபோல பலமுறை சாம்பியன்களான மும்பை மற்றும் சென்னை அணிகளும் 6வது முறையாக கோப்பையை கைப்பற்றுவதற்கு போட்டி போடும் என்று இருக்கும் நிலையில் விராட் கோலி வீரர்களுக்கு சில அறிவுரைகளை வழங்கி இருக்கிறார்.
இது குறித்து அவர் கூறும் போது “நாம் கடந்த மூன்று வருடங்களாக மிகவும் கடுமையாக உழைத்து கடந்த ஆண்டு சிறப்பான சாதனையை படைத்திருக்கிறோம். இது நமக்கு இன்னும் கடினமாக மாறப்போகிறது. ஏனென்றால் மற்ற அணிகள் இன்னும் தீவிரமாக எதிர்த்து நம்மை போட்டியிடப் போகின்றனர். எனவே நாம் இந்த நாட்களை வீணடிக்காமல் எப்போதும் கவனத்தோடு செயல்பட வேண்டும். நாம் கலந்து கொள்ளும் பயிற்சி அமர்வில் கூட ஒரு நிமிடம் கூட வீணடிக்க கூடாது 120 சதவீத உழைப்பை கொடுக்க நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்” என்று பேசி இருக்கிறார்.

