தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிராக விளையாடுவதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என இந்திய அணிக்கு எதிராக விளையாட மாட்டோம் என்று அறிவித்திருந்த பாகிஸ்தான் அரசு தனது முடிவை மாற்றிக் கொண்டிருக்கிறது. இறுதியில் ஐசிசி நடத்திய பேச்சுவார்த்தை வெற்றியில் முடிந்துள்ளது.
இந்த பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் இந்திய அணிக்கு எதிராக எல்லா மட்டத்திலும் போட்டிகளை விளையாடுவதற்கு கோரிக்கை வைத்தது. அடுத்து பங்களாதேஷையும் இணைத்து முத்தரப்பு தொடர் நடத்த வேண்டும் என்ற நிபந்தனையை வைத்தது. இந்த இரண்டுமே ஐசிசி கட்டுப்பாட்டில் இல்லாத விஷயம் என மறுக்கப்பட்டது. இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு icc அதிக நிதி பகிர்வை கொடுக்க கேட்டுக் கொள்ளப்பட்டது. இதற்கும் ஐசிசி சம்மதிக்கவில்லை.
அதே சமயத்தில் டி20 உலக கோப்பை தொடரில் இருந்து விலகியதற்காக பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்துக்கு எந்த தடையும் விதிக்கப்படாது என உறுதி அளிக்கப்பட்டது. இத்துடன் 2031 ஆம் ஆண்டுக்குள் ஐசிசி தொடர் ஒன்றை பங்களாதேஷ் நாட்டில் நடத்த அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிவுக்கு வந்துள்ளது. இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் தங்கள் நாட்டு அணி விளையாடும் என அறிவித்துள்ளார். தற்போது போட்டி ஏற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளன!

