ஆசியக் கோப்பைத் தொடரின் குரூப் 4 சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதன் இன்றைய ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்களை சேர்த்தது.
அசத்திய சிவம் துபே
இந்திய அணி வீரர்களின் மோசமான ஃபீல்டிங் காரணமாக பாகிஸ்தான் அணி கவுரவமான இலக்கை எட்டியது. இந்திய அணி தரப்பில் பும்ரா அதிக ரன்களை விட்டுக் கொடுத்தாலும், சிவம் துபே அபாரமாக செயல்பட்டு இந்திய அணியை காப்பாற்றினார். முதல் 3 ஓவர்களில் 16 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மிடில் ஓவர்களில் பாகிஸ்தான் அணி வெறும் 28 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதனால் 172 ரன்கள் என்ற சவாலான இலக்கை நோக்கி இந்திய அணியின் சுப்மன் கில் – அபிஷேக் சர்மா இணை களமிறங்கியது. ஷாகீன் அப்ரிடி வீசிய முதல் பந்திலேயே அபிஷேக் சர்மா சிக்சர் விளாச, இந்திய அணியின் ரசிகர்கள் துபாய் மைதானத்தையே அலற வைத்தனர். இதன்பின் ஒவ்வொரு பந்தும் பட்டாசாய் வெடித்து கொண்டே இருந்தது.
வெடித்த அபிஷேக் சர்மா
இதனிடையே அபிஷேக் சர்மாவை பாகிஸ்தான் வீரர்கள் வம்புக்கு இழுக்க, அபிஷேக் சர்மா முழு வெறியுடன் கொந்தளித்தார். ஒவ்வொரு ஓவரிலும் ராக்கெட் போல் பந்து சிக்சருக்கும், பவுணடரிக்கும் பறந்து கொண்டே இருந்தது. இதனால் 24 பந்துகளில் அபிஷேக் சர்மா அரைசதம் கடக்க, பாகிஸ்தான் அணிக்கு எதிராக அதிவேகமாக அரைசதம் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.
இதன்பின் சுப்மன் கில் 47 ரன்களிலும், கேப்டன் சூர்யா ரன் ஏதும் எடுக்காமலும், அபிஷேக் சர்மா 74 ரன்களிலும், சஞ்சு சாம்சன் 13 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியாக திலக் வர்மா 19 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து இந்திய அணியை வெற்றி பெற வைத்தார். இதன் மூலமாக இந்திய அணி சூப்பர் 4 சுற்றில் முதல் வெற்றியை பெற்று முன்னிலை பெற்று இருக்கிறது.

