இங்கிலாந்து லயன்ஸ் அணி தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்தியா ஏ மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டு நாள் போட்டி தற்போது டிராவில் முடிவடைந்து இருக்கிறது.
அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து லயன்ஸ் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இதன்படி இங்கிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜென்னிங்ஸ் மற்றும் அலெக்ஸ் லீஸ் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த 66 ரன்களுக்கு தனது முதல் விக்கெட்டைப் பறி கொடுத்தது இங்கிலாந்து லைன்ஸ் அணி. ஜென்னிங்ஸ் 25 ரன்களில் நடையைக் கட்டினார்.
மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் அலெக்ஸ் லீஸ் 35 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். அதற்கு அடுத்த மூன்று விக்கெட்டுகளை மிக விரைவாக இழந்தது இங்கிலாந்து லயன்ஸ் அணி. அதற்குப் பின்னர் ஜோடி சேர்ந்த ராபின்சன் மற்றும் மௌஸ்லி ஆகியோர் இங்கிலாந்து அணியை விக்கெட் சரிவிலிருந்து தடுத்து நிறுத்தினர். ராபின்சன் 45 ரன்கள் குவிக்க, மௌஸ்லி 60 ரன்களில் வெளியேறினார்.
பின்னால் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறியதால் இங்கிலாந்து லயன்ஸ் அணி தனது முதல் இன்னிங்ஸில் 50 ஓவர்களில் 233 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களும் இழந்தது. இந்திய அணித் தரப்பில் அதிகபட்சமாக சுதர் மூன்று விக்கட்டுகளையும் அக்சதீப் இரண்டு விக்கட்களையும் வீழ்த்தினர். இதற்குப் பிறகு தனது முதல் இன்னிங்ஸ் தொடங்கியது இந்தியா ஏ அணி.
கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் 32 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ராஜத் பட்டிதார் அபாரமாக விளையாடி சதம் விளாசினார். 141 பந்துகளில் 18 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 11 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். வரும் மார்ச் மாதம் தொடங்க உள்ள ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக இவர் களமிறங்குகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதற்குப் பிறகு களம் இறங்கிய ரஞ்சன் பால் 21 ரன்களில் வெளியேறினாலும், சர்ப்ராஸ் கான் சிறப்பாக விளையாடினார்.
அவர் 110 பந்துகளில் 11 பவுண்டரி ஒரு சிக்சருடன் 96 ரன்கள் குவித்து எதிர்பாராத விதமாக ஆட்டம் இழந்தார். செஞ்சுரி அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எல் பி டபில்யூ முறையில் அவுட் ஆகி வெளியேறினார். இதற்குப் பின்னர் களமிறங்கிய ஸ்ரீகர் பரத் சிறப்பாக விளையாடி அரை சதம் கடந்தார். சிறப்பாக விளையாடிய ஸ்ரீகர் பரத் 64 ரன்களில் வெளியேறினார்.
அதற்குப் பின்னர் களம் இறங்கிய துருவ் ஜூரேல் அதிரடியாக விளையாடி 38 பந்துகளில் 5 பௌண்டரி 3 சிக்ஸர் உடன் 50 ரன்கள் குவித்து வெளியேறினார். இவர் சர்வதேச போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டித் தொடரில் இந்திய அணிக்காக களம் இறங்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 468 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதில் ஆச்சரியம் அளிக்கும் விஷயம் என்னவென்றால் தமிழக வீரர் சாய் சுதர்சன் 8 விக்கெட்டுகளை இழந்த போதிலும் கடைசி வரை இறங்கவே இல்லை. இரண்டு நாள் மட்டுமே நடைபெறும் ஆட்டம் என்பதால் போட்டி கடைசியில் டிரா செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

