டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி இந்தியா அணியோடு விளையாட மறுத்ததை அடுத்து பல்வேறு தரப்பிலிருந்து இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் வெளியாகி வருகிறது. இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அணிக்கு ஆதரவாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் வக்காலத்து வாங்கி பேசியிருக்கிறார்.
வங்கதேச அணி t20 உலக கோப்பை தொடரிலிருந்து விலகிய நிலையில் அந்த அணிக்கு ஆதரவாக பாகிஸ்தான் அணியும் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் விளையாடப் போவதில்லை என்று அதிரடியாக அறிவித்தது. இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் எதிர்காலத்திற்கு இது ஆபத்தானது என்று பல முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வரும் நிலையில் எப்போதுமே இந்திய அணிக்கு எதிராக கருத்துக்களை பதிவிடும் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் இந்த முறையும் பாகிஸ்தான் அணிக்கு ஆதரவாக சில விஷயங்களை பேசி இருக்கிறார்.
இது குறித்து அவர் கூறும் போது “பாகிஸ்தான் அணி இந்திய அணிக்கு எதிரான போட்டியில் விளையாட மறுத்ததை நான் வரவேற்கிறேன். வங்கதேச அணியின் மூத்த வீரருக்காக வங்கதேச அணி ஆதரவாக இருந்த நிலையில் தற்போது அந்த அணிக்கு ஆதரவாக பாகிஸ்தான் அணி இருக்கிறது. சமீபகாலமாக கிரிக்கெட்டில் அரசியல் புகுந்து விளையாடுகிறது. ஐசிசியையோ அல்லது இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தையோ காயப்படுத்த நினைத்தால் இந்தியா பாகிஸ்தான் போட்டியின் மூலம் வரும் பணத்தை தடுக்க வேண்டும். அதைத்தான் இப்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் செய்திருக்கிறது. கிரிக்கெட் என்பது இரு நாடுகளுக்கும் இடையே ஒரு பாலமாக இருக்க வேண்டும்” என்று பேசி இருக்கிறார்.

