பரபரப்பான ஐபிஎல் தொடர் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின.
கொல்கத்தாவின் சொந்த மைதானமான ஈடன் கார்டனில் நடைபெற்ற இப்போட்டி டாசை இழந்த கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது. கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் குவித்தது. சிறிய இடைவெளிக்கு பின்னர் சிறப்பாக விளையாடிய ரசல் 25 பந்துகளில் 64 ரன்கள் குவித்தார்.
இந்நிலையில் 209 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு நல்ல தொடக்கம் கிடைத்தாலும், பின்னால் வந்த வீரர்கள் அதனை சரியாகப் பயன்படுத்திக்கொள்ள தவறிவிட்டனர். இருப்பினும் அணியின் விக்கெட் கீப்பர் கிளாசன் இறுதிக்கட்டத்தில் மிகச் சிறப்பாக விளையாடி சன்ரைசர்ஸ் அணிக்கு நம்பிக்கை அளித்தார்.
29 பந்துகளில் 8 சிக்ஸர்களை விளாசி 63 ரன்கள் குவித்த நிலையில், களத்தில் இருந்த கிளாசன் கடைசி ஓவரில் ஹைதராபாத் அணியின் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓரை வீசிய கொல்கத்தா அணியின் ஹர்சித் ரானா அந்த ஓவரில் எட்டு ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்ததோடு கிளாசனின் விக்கெட்டையும் வீழ்த்தி கொல்கத்தா அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தார். பரபரப்பான இப்போட்டியில் கொல்கத்தா அணி தங்களது முதல் வெற்றியை பதிவு செய்தது.
வெற்றிக்குப் பின்னர் பேசிய கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அனுபவமில்லாத இளம் வீரருக்கு கடைசி ஓவர் கொடுக்கப்பட்டது ஏன் என்பது குறித்து பேசினார். இது குறித்த அவர் கூறுகையில்
“17 வது ஓவருக்கு பின் எனது வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறந்தது. கடைசி ஓவரில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற நிலையில் வெற்றிக்கு 13 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அப்போது ஹர்ஷித் ரானாவின் மேல் நம்பிக்கை வைத்து கடைசி ஓரை வீச அவரிடம் கொடுத்தேன்.
அப்போது என்ன நடந்தாலும் பரவாயில்லை கவலைப்படாமல் இறுதி ஓவரை வீசு என்று கூறினேன். அப்போது அவரது கண்களில் பதட்டம் தெரிந்தது. அப்போது அவரைப் பார்த்து ‘இது உனக்கான நேரம் தம்பி பதட்டப்படாமல் இரு’ என்று கூறினேன். சொன்னது போலவே மிகச் சிறப்பாக இறுதி ஓரை வீசி முடித்துள்ளார். ரசல் மற்றும் சுனில் நரேன் ஆகியோர் இந்த போட்டியில் சிறப்பாக விளையாடினார்கள்.
முதல் போட்டியை வெற்றியுடன் தொடங்குவது எப்போதும் மகிழ்ச்சியை கொடுக்கும். பில்டிங்கில் இன்னும் நாங்கள் முன்னேற்றம் அடைய வேண்டும். எனவே அடுத்த போட்டியில் குறைகளை நிவர்த்தி செய்து புதிய உத்வேகத்துடன் களமிறங்குவோம்” என்று கூறியிருக்கிறார்.

