நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 5 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க வீரரான சஞ்சு சாம்சன் அதிகபட்சமாக 32 பந்துகளில் 48 ரன்கள் குவித்தார். ஆனால் அந்த அணியின் தொடக்க வீரரும் கேப்டனும் ஆன ருத்ராஜ் கெய்குவாட் கடந்த 5 போட்டிகளாக தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
இருப்பினும் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவரது தலைமையில் முதல் மூன்று போட்டியில் தோல்வியடைந்தாலும் கடைசி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற காரணத்தால் அவர் மீதான விமர்சனம் இன்னும் பெரிய அளவில் எழாமல் இருக்கிறது. ஆனாலும் இனி அடுத்தடுத்த போட்டிகளில் அவர் பெரிய அளவில் விளையாட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இந்த சூழ்நிலையில் சிஎஸ்கே அணியின் முன்னாள் ஜாம்பவான் ஆன சுரேஷ் ரெய்னா, கேப்டன் ருத்ராஜை மூன்றாம் இடத்தில் தான் களம் இறக்குவேன் என்று பேசி இருக்கிறார்.
இது குறித்து அவர் கூறும் போது “நானாக இருந்தால் தற்போதைய சிஎஸ்கே கேப்டனை மூன்றாவது இடத்தில் தான் களம் இறக்குவேன். அணியின் தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் உடன் மற்றொரு வீரரான ஆயுஷ் மாத்ரேவை தொடக்க வீரர்களாக களம் இறக்குவேன். எனவே கேப்டனை மூன்றாவது வரிசையில் தான் களம் இறக்குவேன். இவர்கள் இருவரும் சிஎஸ்கேவிற்கு அதிரடியான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் திறமை படைத்தவர்கள்” என்று பேசி இருக்கிறார்.

