இந்தியாவில் அக்டோபர் மாதம் துவங்கி நடைபெற இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் குறித்து, பல முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் இடம் இருந்து, பல கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது.
இன்னொரு புறத்தில் நடக்க இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க இருக்கும் 10 அணிகளும் அதற்கான தயாரிப்புகளில் மிகவும் பரபரப்பாக ஈடுபட்டு வருகின்றன.
உலகக் கோப்பை தொடர் இன்று எடுத்துக் கொண்டாலே அதன் மைய சுவராசியமே, எதிர்பாராத விஷயங்கள், எதிர்பாராத வீரர்கள் மற்றும் அணிகளிடமிருந்து வரும் என்பதால்தான். எனவே உலகக் கோப்பை கணிக்க முடியாத ஒன்று. ஆனால் கணிப்புகள் என்பது வழக்கமான ஒன்று!
இந்த முறை பலரின் கணிப்புகளில் அரையிறுதிக்கு வரக்கூடிய அணிகளாக இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் இருக்கின்றன. மேலும் அரையிறுதி நாக் அவுட் போட்டி என்பதால் மேற்கொண்டு கணிப்பது கஷ்டம் என்று கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில் லெஜெண்ட் சுழற்பந்துவீச்சாளர் இலங்கையின் முத்தையா முரளிதரன் இடம் உலகக்கோப்பையை எந்த அணி கைப்பற்றுவதற்கு அதிகபட்ச வாய்ப்பு இருக்கிறது? என்ற வழக்கமான கேள்வி முன் வைக்கப்பட்டது. அவர் தன்னுடைய பரந்த கிரிக்கெட் அனுபவத்தில் இருந்து, ஒரு அணியை தேர்ந்தெடுத்து இருக்கிறார்!
இது குறித்து முத்தையா முரளிதரன் கூறும்போது “நம்முடைய சூழ்நிலையில் ஆசிய அணிகள் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளை விட சிறந்த அணிகள். கண்டிஷன் என்பது எப்பொழுதும் முக்கியம். நீங்கள் இந்தியாவில் விளையாடுகிறீர்கள். இங்கிலாந்து நியூசிலாந்தில் அல்ல.
இங்கிலாந்து கடந்த முறை சொந்த நாட்டில் நடைபெற்ற உலகக் கோப்பையை கைப்பற்றியது. அதே சமயத்தில் டி20 உலக கோப்பையில் நியூசிலாந்து அணி இடம் தோல்வி அடைந்தது.
இந்த முறை இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிக்கு மிக நல்ல வாய்ப்பு இருக்கிறது. வங்கதேச அணியை போலவே இலங்கை அணியும் நன்றாகவே விளையாடி வருகிறது. ஆசிய நாடுகளுக்கு இந்த முறை நல்ல வாய்ப்பு இருக்கிறது.
ஒவ்வொரு அணிக்கும் அதன் பலம் மற்றும் பலவீனங்கள் உள்ளன. உலகக் கோப்பை என்பது கணிக்க முடியாத ஒன்று. நீங்கள் நாக் அவுட் போட்டிக்கு வரும் பொழுது அங்கே எல்லாம் கடினம். எல்லா அணிகளும் தங்களுடைய அடிப்படைகளில் பூர்த்தி செய்து பலமாக இருப்பார்கள். ஆனாலும் நீங்கள் கேட்டால் உலகக் கோப்பையை வெல்ல இந்தியாவுக்கு சிறந்த வாய்ப்புள்ளது என்று கூறுவேன். ஏனென்றால் அவர்கள் தங்களது சொந்த நாட்டில் விளையாடுகிறார்கள்!” என்று கூறியிருக்கிறார்!