உலக கிரிக்கெட்டில் இலங்கைக்கு என எப்பொழுதும் ஒரு தனிஇடம் இருக்கிறது. 1981ல் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் அந்தஸ்து பெற்று, அடுத்த 15 ஆண்டுகளில் 1996ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை அர்ஜுன ரணதுங்கா தலைமையில் கைப்பற்றி அசத்தியது!
இலங்கை அணியில் அர்ஜுன ரனதுங்கா, அரவிந்த டி சில்வா, மரவன் அட்டப்பட்டு, சனத் ஜெயசூர்யா, ரமேஷ் கலுவிதரனா, சமிந்தா வாஸ் என பெரிய நட்சத்திர திறமையாளர்கள் பட்டாளம் இருந்தது. இவர்களில் தனித்துவமான ஒருவர் இருந்தார் அவர்தான் முத்தையா முரளிதரன்.
இவருடன் அணியில் இருந்த மற்றவர்கள் எல்லாம் இலங்கை கிரிக்கெட்டின் லெஜன்ட் என்றால், முத்தையா முரளிதரன் உலக கிரிக்கெட்டின் தனி லெஜெண்டாக பந்துவீச்சு துறையில் இருக்கிறார். இவரது சாதனைகளுக்கு அருகில் கூட இப்பொழுது யாரும் கிடையாது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகள் கைப்பற்றி அதிக விக்கெட் கைப்பற்றிய பந்துவீச்சாளராக இருக்கிறார். மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் 534 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். 12 டி20 போட்டிகளில் விளையாடி 13 விக்கட்டுகள் வீழ்த்தி இருக்கிறார். டி20 போட்டியில் இவர் ஒரு ஓவரில் தந்த ரன்கள் 6.31 மட்டும்தான். இவருடைய காலத்தில் ஆரம்பத்தில் டி20 கிரிக்கெட் வந்திருந்தால் அங்கும் இவரது கொடி பறந்திருக்கும்.
சுழற் பந்துவீச்சாளரான இவர் வித்தியாசமான முறையில் ஆப் ஸ்பின் வீசக்கூடியவர். இதன் காரணமாக இவர் பந்தை எறிகிறார் என்று ஆஸ்திரேலியா தரப்பில் புகார் சொல்லப்பட்டு அதிலிருந்து திரும்பி வந்து பல சாதனைகளை செய்தவர். இவருடைய பந்துவீச்சில் தூஸ்ரா வகைப்பந்து, இவருடைய பெரிய ஆயுதமாக இருந்தது. இதற்கு எத்தனையோ பெரிய தலைகள் விழுந்திருக்கின்றன.
இந்த நிலையில் தன் பந்துவீச்சை கடைசிவரையில் சரியாக விளையாட முடியாத இந்திய லெஜெண்ட் ஒருவரைப் பற்றி இவர் கூறுகையில் “சச்சின் என்னை மிக நன்றாக ரீட் செய்தார். பலரால் என்னை அப்படி ரீட் செய்ய முடியாது. அதேபோல் லாராவும் என்னை நன்றாக விளையாடினார். ஆனாலும் கூட அவர் என்னை அட்டாக் செய்து விளையாடவில்லை.
ராகுல் டிராவிட் போன்ற சிலரை அறிவேன். உலகின் சிறந்த வீரர்களில் அவரும் ஒருவர். ஆனால் அவர் என்னுடைய பந்துவீச்சை ரீட் செய்ய மிகவும் கஷ்டப்பட்டார். அவரால் முடியவில்லை. இந்திய அணியில் சச்சின், ஷேவாக், கம்பீர் இவர்களெல்லாம் என் பந்துவீச்சை நன்றாக ரீட் செய்து விளையாடினார்கள். என் அணியில் கூட இருக்கிறார்கள். ஆனால் நிறைய பேர் கிடையாது.
கிரிக்கெட்டில் சச்சின் செய்ததை யாராலும் செய்ய முடியாது. இது மறுக்க முடியாத உண்மை. 15 வயதில் முதல் தர கிரிக்கெட்டுக்கு வருவது, பதினாறு பதினேழு வயதில் சர்வதேச டெஸ்ட் சதத்தை பெறுவது என்பது சாதாரண விஷயம் அல்ல. இது மற்றவர்களால் இயலாத காரியம். இனி ஒரு சச்சின் பிறப்பது கடினம்!” என்று கூறி இருக்கிறார்!