கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டிக்கான தகுதி சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறி இருக்கிறது.
இந்த போட்டியில் தோற்றதற்கான காரணம் குறித்து சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் சில முக்கியக் காரணங்களை கூறியிருக்கிறார். சன்ரைசர்ஸ் அணி இந்த போட்டியில் தோற்றாலும் இறுதிப்போட்டிக்கு செல்ல இன்னொரு வாய்ப்பு இருக்கிறது.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இப் போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அபிஷேக்சர்மா மற்றும் ஹெட் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்க ஸ்டார்க் வீசிய முதல் பந்திலேயே ஹெட் போல்ட் ஆகி வெளியேறி ஆச்சரியம் அளித்தார்.
அதற்குப் பிறகு சீரான வரிசையில் விக்கெட்டுகள் விழ சன்ரைசர்ஸ் அணியை 159 ரன்களுக்கு 10 விக்கெட்களையும் இழந்து ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ராகுல் திருப்பாதி 55 ரன்கள் குவித்தார். பின்னர் வெற்றி இலக்கை நோக்கி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சனி களமிறங்கியது.
67 ரன்களுக்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்தாலும், அதற்கு பின்னர் ஜோடி சேர்ந்த வெங்கடேஷ் அய்யர் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் கூட்டணி கொல்கத்தா அணியை வெற்றி பெற வைத்தது. வெங்கடேஷ் அய்யர் 51 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 58 ரன்களும் குவித்தனர். இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
இந்த தோல்விக்கு பிறகான செய்தியாளர் சந்திப்பில் பேசிய சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ்
“இந்த நாளை விட்டு விரைவாக வெளியே வர வேண்டும். டி20 போட்டியை பொறுத்தவரை நம் கையில் இல்லாத நாட்களும் கண்டிப்பாக இருக்கவே செய்யும். எங்களிடம் சில நல்ல தொடக்கங்கள் கிடைத்தாலும், அதனை நாங்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.
பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலுமே நாங்கள் சொதப்பினோம். இம்பேக்ட் பிளேயராக உம்ரான் மாலிக்கை பயன்படுத்தும் திட்டம் எங்களிடம் இல்லை. கூடுதல் பேட்ஸ்மேன் வேண்டும் என்று சன்வீர் சிங்கை உள்ளே கொண்டு வந்தோம். கேகேஆர் அணி சிறப்பான முறையில் பந்து வீசினார்கள். நாங்கள் அடுத்து சென்னையில் விளையாட வருகிறோம். புது இடத்திற்கு விளையாட செல்வது நல்ல உணர்வு. அங்குதான் எங்களுக்கு வேலைகள் இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.
இன்று நடைபெற உள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் வெற்றி பெறும் அணி அடுத்ததாக சன்ரைசர்ஸ் அணியுடன் இரண்டாவது ப்ளே ஆப் சுற்றில் மோதும்.

