13 வது உலகக் கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற 32 வது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டி தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு அவர்களது அரை இறுதி வாய்ப்புகளை உறுதி செய்வதற்கு முக்கிய போட்டியாக அமைந்தது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் டெம்பா பவுமா 24 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழக்க குயின்டன் டிக்காவுடன் ஜோடி சேர்ந்தார் வான்டர் டுசன். இவர்கள் இருவரும் நிதானமாக ஆடி மிகப்பெரிய பார்ட்னர்ஷிப் அமைய வலுவான அடித்தளம் அமைத்தனர். அதிரடியோடு நிதானமாகவும் விளையாடிய இவர்கள் இருவரும் தங்களது அரை சதத்தை பதிவு செய்தனர்.
மேலும் 30 ஓவர்களை கடந்ததும் அதிரடியில் இறங்கிய குயின்டன் டிகாக் இந்த வருட உலகக்கோப்பை போட்டியில் தனது நான்காவது சதத்தை பதிவு செய்தார். மேலும் இது அவரது ஓடிஐ கேரியரில் 21 வது சதமாகும். மேலும் இந்திய மைதானங்களில் அரை சதத்தை கடந்த அனைத்து போட்டிகளிலும் சதம் அடித்திருக்கிறார் டிகாக் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் வாண்டார் டுசன் உடன் இணைந்து இரண்டாவது விக்கெட் 200 ரன்கள் சேர்த்தார். 116 பந்துகளில் மூன்று சிக்ஸர்கள் மற்றும் 10 பவுண்டரிகளுடன் 114 ரன்கள் சேர்த்து இருந்த டிகாக் அவுட் ஆனார்.
இதனைத் தொடர்ந்து அதிரடி வீரரும் மில்லர் களமிறங்கினார். இவர் வாண்டர் டுசனுடன் இணைந்து 43 பந்துகளில் 78 ரன்கள் சேர்த்தார். அதிரடியாக விளையாடிய வாண்டார் டுசன் 118 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 9 பவுண்டரிகளுடன் 133 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். மறுமுனையில் அதிரடியாக விளையாடிய மில்லர் 30 பந்துகளில் நான்கு சிக்ஸர்கள் மற்றும் இரண்டு பவுண்டரிகளுடன் 53 ரன்களில் ஆட்டம் இழந்தார் . தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 357 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து அணியின் பந்துவீச்சில் சவுதி இரண்டு விக்கெட்டுகளும் போல்ட் மற்றும் நீஷாம் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து 358 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் டேவன் கான்வே இந்தப் போட்டியிலும் இரண்டு ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றினார். இவரைத் தொடர்ந்து கடந்த போட்டியில் சதம் அடித்த இளம் ஆல் ரவுண்டர் ரவிந்த்ரா 9 ரன்னில் அவுட் ஆனார். இவர்களைத் தொடர்ந்து டேரில் மிச்சல் 24 ரன்னிலும் கேப்டன் லேதம் 4 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர் . அந்த அணியின் துவக்க வீரர் வில் யங் 33 ரன் எடுத்து அவுட் ஆனார். நியூசிலாந்து அணியில் கிளன் பிலிப்ஸ் தவிர வேறு எந்த வீரரும் நிலைத்து நின்று ஆடவில்லை. நியூசிலாந்து அணியின் 8 வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டம் இழந்து ஏமாற்றினர்.
நியூசிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் கிளன் பிலிப்ஸ் அதிகபட்சமாக 50 பந்துகளில் நான்கு பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர்களுடன் 60 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதனால் நியூசிலாந்து அணி 35 3 ஓவர்களில் 167 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் தென்னாப்பிரிக்கா 190 ரன்கள் வித்தியாசத்தில் மீண்டும் ஒரு அபார வெற்றியை பெற்றிருக்கிறது. இந்த வெற்றியின் மூலம் மீண்டும் சவுத் ஆப்பிரிக்கா அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்திற்கு சென்றுள்ளது சவுத் ஆப்பிரிக்கா அணியின் பந்துவீச்சில் கேசவ் மகராஜ் 4 விக்கெட்டுகளும் யான்சன் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இந்த தோல்வி நியூசிலாந்து அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்திருக்கிறது. 190 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததன் மூலம் அந்த அணியின் நெட் ரன் ரேட் அடிவாங்கி இருக்கிறது. இதனால் நியூசிலாந்து மீதி இருக்கும் இரண்டு போட்டிகளிலும் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளை வீழ்த்த வேண்டிய நெருக்கடியில் இருக்கிறது. மற்றொருபுறம் பாகிஸ்தான் அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணியுடனும் நல்ல ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் பாகிஸ்தான் அரையிறுதிக்கு செல்வதற்கான வாய்ப்புகளும் தற்போது சாத்தியமாகி இருக்கிறது. தென்னாபிரிக்கா அணியின் இந்த வெற்றியால் இந்தியா இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.