2024 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெறும் நிலையில், இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் இந்த டி20 உலகக்கோப்பையோடு ஓய்வு பெறப் போவதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளிவந்திருக்கிறது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்க இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில் நேற்று இந்திய அணி தனது உலகக் கோப்பை 15 பேர் கொண்ட இந்திய அணியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதில் ரோஹித் சர்மா கேப்டனாக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். இதில் இந்திய ஜாம்பவான் விராட் கோலியும் அணியில் தொடர்கிறார்.
விராட் கோலி டி20 கிரிக்கெட்டில் மெதுவாக விளையாடுகிறார் எனவே அவரது பெயர் உலக கோப்பையில் இடம்பெறக்கூடாது என்று பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வந்த நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பாக விளையாடி வரும் விராட் கோலி தன் மீது எழுந்த அனைத்து விமர்சனங்களுக்கும் தனது பேட்டின் மூலம் பதில் அளித்தார். அனுபவம், இளம் ரத்தம் என சரியான முறையில் இந்த உலகக் கோப்பை அணி தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இரண்டு ஜாம்பவான்களும் டி20 உலகக் கோப்பையோடு ஓய்வு பெறப் போவதாக ஸ்போர்ட்ஸ் டாக்கின் மூலம் தகவல் வெளிவந்திருக்கிறது. இந்திய அணி இந்த உலகக் கோப்பையை வென்றாலும் இதுவே இவர்களது கடைசி உலக கோப்பை தொடராக இருக்கும்.
2022ஆம் ஆண்டு டி20 உலக கோப்பைக்கு பிறகு விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா டி20 தொடர்களில் பங்கேற்கவில்லை. இளம்வீரர் ஹர்திக் பாண்டியா தலைமையிலேயே இந்திய அணி டி20 போட்டிகளில் பங்கேற்றது. ஆனால் அதற்குப் பிறகு பாண்டியாவும் காயம் காரணமாக வெளியேற மீண்டும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் மீண்டும் ரோகித் சர்மாவையே கேப்டனாக களம் இறக்கியது.
அத்தொடரிலும் விராட் கோலி மீண்டும் டி20 அணிக்கு திரும்பினார். எனவே தற்போது உலகக்கோப்பையின் முக்கியத்துவம் அறிந்து இந்த இரண்டு வீரர்களும் மீண்டும் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்த உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா மற்றும் அமெரிக்காவுடன் இந்திய அணி குழு ‘ஏ’ வில் உள்ளது. இதைத்தொடர்ந்து சூப்பர்8 சுற்று நடைபெறும் நிலையில், இந்தியா நான்கில் ஒரு இடத்தை பிடித்தால் அரையறுதி போட்டிகள் ஜூன் கடைசி வாரத்தில் நடைபெறும்.
அரை இறுதி போட்டி ஜூன் 26 மற்றும் 27 ல் டயானா மற்றும் டிரிடினாட் நகரங்களிலும், இறுதிப் போட்டி ஜூன் 29 இல் பார்படாசில் நடைபெற உள்ளது. எனவே இந்த போட்டிகளில் ஏதேனும் ஒரு போட்டி இந்த இந்திய ஜாம்பவான்களுக்கு விடைபெறும் போட்டியாக இருக்கலாம். டி20 கிரிக்கெட்டைப் பொறுத்தவரை ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி அதிக ரன் எடுத்தவர்கள் என்ற பட்டத்தை வைத்துள்ளனர்.
கோலி 51.75 சராசரியுடன் 4031 ரன்களையும், ரோஹித் சர்மா 31.79 சராசரியில் 3974 ரன்களும் குவித்துள்ளார். விராட் கோலி ஒரு சதம் மற்றும் 37 அரை சதமும், ரோகித் 5 சதங்கள் மற்றும் 29 அரை சதங்களும் அடங்கும். இவர்கள் இருவரும் ஓய்வு பெறப்போகும் செய்தியை கேட்டு ரசிகர்கள் தற்போது கலக்கத்தில் உள்ளனர்.

