டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது அமெரிக்காவில் நடைபெற்று வரும் நிலையில், உலகக்கோப்பை தொடங்குவதற்கு முன்பாக இந்திய அணியில் அனைத்து கிரிக்கெட் வல்லுனர்களும், ரசிகர்களும் இந்திய அணியில் கண்டிப்பாக இடம் பெற வேண்டும் என்று வலியுறுத்திய பெயர் சிவம் துபே.
காரணம் ஐபிஎல்லில் இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கடந்த இரண்டு ஆண்டுகளாக மிகச் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கிறார்.
மேலும் மிடில் ஆர்டரில் களமிறங்கி சுழற் பந்துவீச்சை அடித்து விளையாடும் திறமை படைத்தவராக இருப்பதால், இவர் களமிறங்கினால் மிடில் ஆர்டரில் பிரச்சனை தீரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மேலும் யுவராஜ் சிங் போல அதிக உயரம் கொண்டவராக இருப்பதாலும் அவரைப் போலவே சிக்ஸர்கள் அடிக்கும் திறன் பெற்றவராக இருந்தார்.
ஆனால் இவரது பெயர் உலகக் கோப்பை தேர்வு செய்த பின்னர் சென்னை அணியிலேயே சில ஆட்டங்கள் சொதப்பலாக விளையாடினார். அதற்குப் பிறகு இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான பயிற்சி போட்டியிலும் இவரது சுமாரான ஆட்டம் தொடர்ந்தது. அதற்குப் பின்னர் நடைபெற்ற இரண்டு உலகக் கோப்பை ஆட்டங்களிலும் மேலும் தொடர்ந்து சுமாரான பேட்டிங் பங்களிப்பை வழங்கினார்.
இது ஒரு பிரச்சனையாக பார்க்கப்பட்ட நிலையில், தற்போது இவருக்குபீல்டிங்கிலும் பிரச்சனை இருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் பாகிஸ்தான் வீரர்கள் அதிரடியாக விளையாட முயற்சித்து இந்திய அணி வெற்றி பெறும் நிலையில் ஒரு கேட்ச் வாய்ப்பை கொடுத்தனர். சிவம் துபே கையில் விழுந்த அந்த எளிமையான கேட்ச் வாய்ப்பையும் தவறவிட்டார்.
இருப்பினும் இந்திய பந்து வீச்சாளர்கள் அதற்குப் பிறகு சிறப்பாக விளையாடி இந்தியாவை வெற்றி பெற வைத்தனர். இதனால் அவர் மீதான பிரச்சனை பெரிதாக பேசப்படவில்லை. இல்லையெனில் இது தற்போது மிகப்பெரிய பேசு பொருளாக மாறி இருக்கும். இவருக்கு ஃபீல்டிங்கில் இப்படி ஒரு பிரச்சனை இருப்பது தோனிக்கு முன்னரே தெரிய வந்திருக்கிறது.
இதனால்தான் இவரை சென்னை அணியில் இம்பேக்ட் வீரராக மட்டுமே பயன்படுத்தினார். அதாவது இவரை பீல்டிங் செய்ய வைக்காமல் வெறும் பேட்டிங்கில் மட்டுமே தோனி இவரை பயன்படுத்தியுள்ளார். இது தற்போது ரோகித் சர்மாவுக்கு நிச்சயம் தலைவலியை உண்டாக்கி இருக்கக்கூடும்.
இதையும் படிங்க:இந்தியா உலகக்கோப்பை ஜெயிக்கிறது உங்க கையிலதான் இருக்கு.. அதனால இதை மட்டும் தொடர்ந்து பண்ணுங்க.. கூறுகிறார் அணில் கும்ப்ளே
இந்திய அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதற்கு முன்பாக இன்னும் இரண்டு போட்டிகளில் விளையாடவிருப்பதால் இவரது திறமையை இன்னும் இந்திய அணி சோதித்துப் பார்க்க முயற்சிக்கும். மேலும் தொடர்ந்து பேட்டிங்கிலும் சொதப்பி வருவதால் இன்னும் மற்றொரு விக்கெட் கீப்பரான சஞ்சு சாம்சனையே பிளேயிங் லெவனின் விளையாட வைக்க முயற்சிக்கும். இனி இவருக்கான வாய்ப்பு இவரது செயல்பாடுகளில் மட்டுமே தான் உள்ளது.

