இந்திய அணி தனது சொந்த நாட்டில் நடைபெற இருக்கும் ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு தயாராவதில் பின்னடைவை சந்தித்து வருகிறது. அதே சமயத்தில் மற்ற பெரிய அணிகள் ஏறக்குறைய முழுமையாகவே தயாராகி உலகக் கோப்பையை சந்திக்க இருக்கின்றன!
இந்திய அணி நிர்வாகம் இந்த விஷயத்தில் மிகவும் மெத்தனமாக இருந்ததா என்றால் கிடையாது. முக்கியமான வீரர்களுக்கு ஏற்பட்ட காயத்தாலும், அவர்களது காயம்குணமடைந்து வருகின்ற காரணத்தாலும், ஆசியக் கோப்பை மற்றும் உலகக்கோப்பைக்கு வீரர்களை இறுதி செய்து அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது!
இந்திய அணிக்கு பேட்டிங் வரிசையில் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் நான்காம் இடம் என்பது யுவராஜ் சிங் ஓய்வு பெற்ற பின்பு பெரிய பிரச்சினையாகவே இருந்து வருகிறது. இதற்கு ஸ்ரேயாஸை கொண்டு வந்து தீர்வு காணப்பட்டது. ஆனால் தற்போது அவர் காயத்தில் இருப்பதால் மீண்டும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் அந்த இடத்திற்கு சஞ்சு சாம்சன் மற்றும் சூரியகுமார் ஆகியோரை முயற்சி செய்து வருகிறது. மேலும் தற்போது திலக் வர்மாவும் அந்த இடத்திற்கு போட்டியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி நம்பர் நான்காம் இடம் குறித்து பேசும்பொழுது “2019 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையின் போது விராட் கோலியை நான்காம் இடத்திற்கு நகர்த்துவது பற்றி நான் தேர்வுக்குழுவிடம் பேசலாம் என்று இருந்தேன். ஆனால் பின்பு நான் அதை செய்யாமல் விட்டு விட்டேன். அவரது புள்ளி விவரங்களை எடுத்துப் பார்த்தால் அவர் நான்காவது இடத்திலும் நன்றாகவே இருக்கிறார். எனவே அவரை அந்த இடத்தில் முயற்சி செய்து பார்க்கலாம்!” என்று கூறி இருந்தார்!
தற்பொழுது இதற்கு பதில் அளித்து பேசி உள்ள ரவிச்சந்திரன் அஷ்வின் ” விராட் கோலி 2011ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பையில் நம்பர் நான்காம் இடத்தில் பேட்டிங் செய்தார். தேவை ஏற்பட்டால் விராட் கோலி இந்த முறையும் நான்காம் இடத்தில் பேட்டிங் செய்ய வேண்டும் என்று ரவி பாய் குறிப்பிட்டு உள்ளார். மேலும் அந்த இடத்தில் ஒரு இடது கை ஆட்டக்காரருக்கும் இடம் அளிக்கலாம் என்று அவர் கூறியிருப்பதாக தெரிகிறது.
கே.எல்.ராகுல் உடல் தகுதி பெறவில்லை என்றால் மட்டுமே விராட் கோலி நான்காம் இடத்தில் பேட்டிங் செய்வதற்கான வாய்ப்புகள் உருவாகுமே தவிர, மற்றபடி அவர் அந்த இடத்தில் விளையாடுவதற்கு வாய்ப்பே கிடையாது. அவர்கள் அப்பொழுது இஷான் கிஷானுடன் ஓபன் செய்யலாம். அதனால் விராட் கோலி நான்காம் இடத்தில் வரலாம். மேலும் நான்காம் இடத்திற்கு ஸ்ரேயாஸ் செல்லக்கூடிய ஒரு வீரராக இருப்பார்!” என்று கூறியிருக்கிறார்!