2005 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக வேதப்பந்துவீச்சாளராக அறிமுகமானவர் ஸ்ரீசாந்த். கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த இவர் 2005 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை இந்திய அணிக்காக ஒருநாள் டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியவர். ஐபிஎல் தொடரிலும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்காக விளையாடி இருக்கிறார்.
ஐபிஎல் தொடரின் போது ஸ்பாட் பிக்ஸிங் புகாரில் சிக்கிய இவருக்கு பிசிசிஐ தடை விதித்தது. பின்னர் தன் மீது விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக நீதிமன்றத்தில் போராடி வெற்றி பெற்றார். தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராக பணியாற்றி வரும் இவர் லெஜெண்ட் லீக் கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடி வருகிறார். 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் மிஸ்பா கொடுத்த இறுதி கேட்சை பிடித்ததும் இவர்தான்.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் மீது கேரளாவின் கண்ணூரை சேர்ந்த நபர் ஒருவர் புகார் அளித்திருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்த ஷரீஃஹ் பலகோபாலன் என்ற நபர் ஸ்ரீசாந்த் மற்றும் உடுப்பி மாவட்டத்தை சேர்ந்த இரண்டு நபர்கள் தன்னிடமிருந்து 18 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மோசடி செய்ததாக காவல்துறையில் புகார் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக அளிக்கப்பட்டு இருக்கும் புகாரில் உடுப்பி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜீவ் குமார் மற்றும் வெங்கடேஷ் கின்னி என்ற இரண்டு நபர்கள் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த பலகோபாலன் என்ற நபரிடம் இருந்து உடுப்பியில் தொடங்க இருக்கும் கிரிக்கெட் அகாடமியில் பங்குதாரராக சேர்த்துக் கொள்வதாகவும் மேலும் அவரது பெயரில் ரிசார்ட் ஒன்று கட்ட இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அவர்கள் உறுதியளித்தது போல் ரிசார்ட் கட்டிடம் கட்டவில்லை.மேலும் பாலகோபாலனை ஸ்ரீசாந்த் தொடங்க இருக்கும் ஸ்போர்ட்ஸ் அகாடமியிலும் பார்ட்னராக சேர்க்கவில்லை. அவரிடமிருந்து பெற்ற பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் இருந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இவர்கள் மூவருக்கு எதிராகவும் கண்ணூர் நீதிமன்றத்தில் புகார் அளித்திருக்கிறார் ஷரீஃஹ் பலகோபாலன்.
இதனைத் தொடர்ந்து கண்ணூர் மாஜிஸ்ட்ரேட் நீதிபதி இந்த வழக்கை விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கும்படி காவல் துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இந்த மூவரின் மீதும் இந்திய தண்டனைச் சட்டம் 420 செக்ஷனில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இது கிரிக்கெட் உலகிலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது தான் சூதாட்டப் புகார்களில் சிக்கி அதிலிருந்து வெளியே வந்த ஸ்ரீசாந்த் மீது தற்போது மோசடி புகார் பதிவு செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்திய அணிக்காக 90 சர்வதேச போட்டிகளில் விளையாடி இருக்கும் ஸ்ரீசாந்த் 169 விக்கெட் வீழ்த்தி இருக்கிறார். மேலும் 44 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி நாற்பது விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 2007 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் இந்திய அணி டி20 மற்றும் 50 ஓவர் உலகக் கோப்பையை வென்ற போது இரண்டு அணிகளிலும் இடம் பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.