யார்க்கர் பந்து மூலம் பெயர் பெற்று உள்ளூரில் இருந்து இந்திய அணிக்காக அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் கால் பதித்தார் நம் தமிழக வீரர் தங்கராசு நடராஜன். டி.என்.பி.எல் போட்டிகளில் சிறப்பாக விளையாடி ஐ.பி.எல் தொடரை எட்டிய இவர் அங்கும் முழு வேகத்தோடு செயல்பட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
2020ஆம் ஆண்டு தொடர்ச்சியாக சிறப்பாக பந்துவீசி இந்திய அணிக்கு விளையாடும் வாய்ப்பைப் பெற்றார். ஆஸ்திரேலியா சுற்று பயணத்தில் ஒருநாள், டி20ஐ, டெஸ்ட் என அனைத்து தொடர்களிலும் வாய்ப்புக் கிடைக்க அதைச் சரியாகவும் பயன்படுத்தினார்.
ஆனால் அதன் பின்னர் அவருக்கு வாய்ப்பே கிடைக்கவில்லை. பல்வேறு காயங்களால் அணியில் இடம் கிடைக்காமல் தவித்தார். இது அவரின் கேரியருக்கு பெரிய பின்னடைவு. ஆனால் அதையெல்லாம் மனதில் வைத்துக் கொள்ளாமல் தொடர்ந்து சிறப்பாக செய்து வருகிறார்.
கடந்த ஆண்டு ஐ.பி.எலில் சன்ரைசர்ஸ் அணிக்காக துல்லியமாக பந்துவீசி 19 விக்கெட்டுகளை அள்ளி அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்தார். இவ்வளவு தரமாக செயல்பட்டும் அவருக்கு டி20ஐ உலகக் கோப்பையில் வாய்ப்புக் கிடைக்கவில்லை. அதன் பின்னர் நடந்த இலங்கை சுற்றுப்பயணத்திலும் அவரின் பெயரை பிசிசிஐ கண்டுகவில்லை.
தனது எதிர்கால கிரிக்கெட் கேரியர் குறித்து நடராஜன் அண்மையில் பேசியுள்ளார். ” நான் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடி நான்கு ஆண்டுகளுக்கு மேல் இருக்கும். அதனால் நான் இந்த வடிவடிக் கிரிக்கெட்டில் விருபாம் காட்டவில்லை என்று நினைக்க வேண்டாம். எனக்கு சிகப்புப் பந்து கிரிக்கெட் மிகவும் பிடிக்கும். ஆனால் என்னுடைய முழங்கால் காயம் காரணமாக இதில் இருந்து விலகியுள்ளேன். “
” இப்போதைக்கு லிமிடட் ஓவர்ஸ் கிரிக்கெட்டில் தான் கவனம் செலுத்தி வருகிறேன். எல்லாம் சரியாக போனால் ஒரு இரண்டு ஆண்டில் நிச்சயம் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட தயாராகி விடுவேன். பார்க்கலாம். ” என்றார் நடராஜன்.

