இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதி வரும் டெஸ்ட் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது. பெர்த் நகரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியை இந்தியா வென்ற நிலையில் அடிலெய்ட் டெஸ்ட் போட்டியை ஆஸ்திரேலியா வென்றதன் மூலம் தொடர் சமநிலை அடைந்தது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது.
இதனால் டெஸ்ட் போட்டி தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இதன் காரணமாக மெல்போர்ன் நகரில் நடைபெற இருக்கும் நான்காவது டெஸ்ட் போட்டியை வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெறுவதற்கு இரு அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. ஆஸ்திரேலிய அணியின் பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் இந்திய பந்துவீச்சை சமாளிப்பதற்கு தடுமாறி வந்த நிலையில் அந்த அணியின் டிராவிஸ் ஹெட் இந்திய அணிக்கு எப்போதும் தலைவலியாக இருந்து வருகிறார்.
2023 ஆம் வருடம் நடைபெற்ற டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி, மற்றும் 2023 ஆம் வருட உலகக்கோப்பை இறுதிப்போட்டிகளில் சதமடித்து இந்திய அணியின் வெற்றி வாய்ப்பை பறித்த அவர் தற்போது நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரிலும் 2 சதங்கள் மற்றும் 1 அரை சதம் என இந்தியா அணிக்கு எதிராக தனது ஆதிக்கத்தை தொடர்ந்து நிலைநாட்டி வருகிறார்.
அடிலெய்ட் நகரில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகள் இழந்து தடுமாறிய போது களத்திற்கு வந்த ஹெட் அதிரடியாக 140 ரன்கள் குவித்து போட்டியை ஆஸ்திரேலிய அணியின் பக்கம் திருப்பினார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியிலும் தனது கவுன்டர் அட்டாக்கிங் ஸ்டைலில் 152 ரன்கள் குவித்த அவர் ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் 445 ரன்கள் எடுக்க முக்கிய காரணமாக அமைந்தார்.
மேலும் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் ஹெட்டை அட்டாக் செய்து அவரது விக்கெட்டை வீழ்த்த தவறிவிட்டனர் என கிரிக்கெட் விமர்சகர்களும் தங்களது கருத்தை பகிர்ந்து வந்தனர். இந்நிலையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் டிராவிஸ் ஹெட்டிற்கு எதிராக சிறப்பான திட்டத்தை வகுத்திருப்பதாக தெரிவித்திருக்கிறார். மேலும் அவரது பலவீனத்தை பயன்படுத்தி நடைபெற இருக்கும் நான்காவது டெஸ்ட் போட்டியில் ஹெட் விக்கெட்டை வீழ்த்துவோம் எனவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஆகாஷ் தீப், “டிராவிஸ் ஹெட்டிற்கு எதிராக சிறப்பான திட்டங்கள் எங்களிடம் இருக்கிறது. அதனை செயல்படுத்தி அவரது விக்கெட்டை விரைவாக வீழ்த்துவோம். என்ன திட்டம் என்பதை பொதுவெளியில் தெரிவிக்க முடியாது. ஏனெனில் அவர் இதனை பயன்படுத்தி தனது ஆட்டத்தை மாற்றிக் கொள்ள இயலும். எனினும் எங்களிடம் அவருக்கு எதிரான திட்டங்கள் இருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறியிருக்கிறார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர்” ஹெட் பவுன்சர் பந்து வீச்சுக்கு எதிராக பலவீனமானவராக இருக்கிறார். எனவே அதனை பயன்படுத்தி ஓவர் தி விக்கெட் மற்றும் அரவுண்ட் தி விக்கெட் கோணங்களில் தொடர்ந்து, ஒரே லைன் மற்றும் லென்தில் பந்து வீசி அவரது விக்கெட்டை வீழ்த்துவோம்” எனவும் தெரிவித்துள்ளார். வேகப்பந்துவீச்சாளர்கள் அனைவரும் ஒரே குழுவாக செயல்பட்டு சிறப்பான லைன் மற்றும் லென்த்தில் பந்துவீசி ஆஸ்திரேலிய அணியின் ஆட்டக்காரர்களுக்கு நெருக்கடி கொடுப்போம் எனவும் தெரிவித்திருக்கிறார்.

