நடப்பு உலக கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறது. 9 போட்டிகளில் நான்கு வெற்றிகள் உடன் 8 புள்ளிகள் பெற்று உலகக்கோப்பை பாயிண்ட்ஸ் டேபிளில் 6வது இடத்தில் முடித்திருக்கிறது ஆப்கானிஸ்தான். இதன் மூலம் அந்த அணி 2025 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கும் தகுதி பெற்று இருக்கிறது.
முன்னதாக இந்த வருட உலகக் கோப்பையில் இங்கிலாந்து பாகிஸ்தான் மற்றும் ஸ்ரீலங்கா போன்ற முன்னாள் உலக சாம்பியன்களையும் வீழ்த்தி கிரிக்கெட் ரசிகர்களையும் விமர்சகர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. சிறந்த பந்துவீச்சாளர்களைக் கொண்ட அணியாக கருதப்பட்ட ஆப்கானிஸ்தான் இந்த உலகக் கோப்பையில் தங்களது சிறப்பான பேட்டிங் மூலமும் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணியுடன் வெற்றி பெற்றது.
தற்போது ஆப்கானிஸ்தான் அணியின் இளம் துவக்க வீரரான ரஹ்மத்துல்லாஹ் குர்பாஸ் செய்த ஒரு செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவர் செய்த அந்த மனிதாபிமானம் மிக்க செயல் அவருக்கே தெரியாமல் வீடியோ எடுக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது. அவரது மனிதாபிமானம் மிக்க இந்த செயலுக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
ஆப்கானிஸ்தான் அணி தங்களது கடைசி லீக் போட்டியை குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் வைத்து விளையாடியது. இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்தப் போட்டிக்குப் பிறகு அந்த அணியின் வீரர் ரஹ்மத்துல்லாஹ் குர்பாஸ் அகமதாபாத்தில் சாலை ஓரம் படித்திருந்த ஏழை மக்களுக்கு தீபாவளி கொண்டாடுவதற்காக அதிகாலை நேரத்தில் பண உதவி செய்து இருக்கிறார்.
மேலும் தான் யார் என்று அடையாளம் காட்டிக் கொள்ளாமல் ஏழை மக்களுக்கு பண உதவி செய்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். இதனை அப்பகுதியில் இருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றி இருக்கிறார். அந்த வீடியோ தற்போது வைரலாகி இருக்கிறது. அவரது மனிதாபிமானம் மிக்க இந்த செயல் அனைவரின் பாராட்டுக்களையும் மனங்களையும் வென்றிருக்கிறது. தற்போது ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும் குர்பாஸ் கடந்த வருட ஐபிஎல் போட்டிகளில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம் பெற்று இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கோடி கோடியாக சம்பாதிப்பவர்களுக்கு கூட இப்படி ஒரு மனசு வராது என கிரிக்கெட் ரசிகர்கள் இவரை வாழ்த்தி வருகின்றனர்.
இந்த உலகக்கோப்பை தொடர் அவருக்கு சிறப்பான ஒன்றாக அமையவில்லை. ஒன்பது போட்டிகளில் விளையாடியிருக்கும் அவர் 280 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார். இதில் மூன்று அரை சதங்கள் அடங்கும். இந்த உலகக் கோப்பையில் அவரது சராசரி 31.11 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 98.93. துவக்கத்தில் சிறப்பாக ஆடினாலும் உலகக்கோப்பையின் இரண்டாவது பாதி ஆட்டங்களில் நான்கு போட்டிகளில் விளையாடிய 56 ரன்கள் மட்டுமே எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Rahmanullah Gurbaz silently gave money to the needy people on the streets of Ahmedabad so they could celebrate Diwali.
— Mufaddal Vohra (@mufaddal_vohra) November 12, 2023
– A beautiful gesture by Gurbaz. pic.twitter.com/6HY1TqjHg4
இந்த உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறுவதற்கு நல்ல வாய்ப்பு இருந்தது. ஆனால் ஆஸ்திரேலியா அணியுடன் நடைபெற்ற போட்டியில் தோல்வி அடைந்ததால் அவர்கள் அரை இறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தனர். அந்தப் போட்டியில் ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலியா 91 ரன்களுக்கு 7 விக்கெட்டுகள் இழந்திருந்தது. எனினும் மேக்ஸ்வெல் அடித்த சிறப்பான இரட்டை சதத்தால் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் மேக்ஸ்வெல் கொடுத்த 2 கேட்சுகளை ஆப்கானிஸ்தான் வீரர்கள் தவறவிட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

