ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 198 ரன்களை குவித்தது. சிறப்பாக ஆடிய சுப்மன் கில் 55 பந்துகளில் 90 ரன்களையும், சாய் சுதர்சன் 36 பந்துகளில் 52 ரன்களையும் விளாசினார்.
5 அரைசதங்கள்
இந்த போட்டியில் 52 ரன்களை விளாசியதன் மூலமாக ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்களுக்கு அளிக்கப்படும் ஆரஞ்ச் கேப்பை சாய் சுதர்சன் கைப்பற்றியுள்ளார். இதுவரை 8 போட்டிகளில் ஆடியுள்ள சாய் சுதர்சன் 5 அரைசதங்கள் உட்பட 417 ரன்களை விளாசி இருக்கிறார். இவருக்கு பின் லக்னோ அணிக்காக ஆடி வரும் பூரன் 368 ரன்களுடன் 2வது இடத்தில் இருக்கிறார்.
சாய் சுதர்சன் – பூரன் இடையிலான ரன் வித்தியாசத்தில் சுமார் 50ஆக உள்ளது. இதனால் இனி ஆரஞ்ச் கேப் பட்டியலில் சாய் சுதர்சனை கீழே இறக்குவது அவ்வளவு எளிதாக இருக்காது என்று பார்க்கப்படுகிறது. காயத்திற்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சாய் சுதர்சன் ஓய்வில் இருந்தார். நேரடியாக அவர் ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார்.
தமிழக சிங்கம்
இதனால் அவரின் ஆட்டம் எப்படி இருக்கும் என்று பார்க்கப்பட்டது. ஆனால் முதல் போட்டியில் இருந்தே சாய் சுதர்சன் கன்சிஸ்டன்சியுடன் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். குஜராத் அணிக்காக விளையாடி வந்தாலும், தமிழக வீரர் என்பதால் சாய் சுதர்சன் தமிழக ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.
அதுமட்டுமல்லாமல் ஆங்கில வர்ணனையிலும் சாய் சுதர்சனின் கன்சிஸ்டன்சி தொடர்பாக தொடர்ந்து பாராட்டுகள் வருகிறது. ஏற்கனவே இந்திய அணிக்காக சாய் சுதர்சன் அறிமுகம் செய்யப்பட்டிருந்தாலும், விரைவில் இந்திய அணியில் சாய் சுதர்சனுக்கு நிரந்தர இடம் கிடைக்கும் என்று பலரும் கூறி வருகின்றனர்.

