ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியை எதிர்த்து ராஜஸ்தான் அணி விளையாடியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பவுலிங்கை தேர்வு செய்தார். பின்னர் களமிறங்கிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 187 ரன்களை எடுத்தது. 17 ஓவர்கள் வரை சிறப்பாக ஆடிய சிஎஸ்கே அணி கடைசி 3 ஓவர்களில் 13 ரன்களை மட்டுமே சேர்த்தது.
ஜெய்ஸ்வால் அதிரடி
பின் ராஜஸ்தான் அணி தரப்பில் ஜெய்ஸ்வால் – சூர்யவன்ஷி கூட்டணி தொடக்கம் கொடுத்தது. முதல் 2 ஓவர்களில் நிதானம் காத்த ஜெய்ஸ்வால், கலீல் அஹ்மத் வீசிய 3வது ஓவரில் ஒரு சிக்ஸ், 3 பவுண்டரியை விளாசி தள்ளினார். தொடர்ந்து அன்சுல் கம்போஜ் ஓவரில் ஜெய்ஸ்வால் 36 ரன்கள் எடுத்து போல்டாகி வெளியேறினார்.
இதன்பின் சஞ்சு சாம்சன் – சூர்யவன்ஷி கூட்டணி இணைந்து அட்டாக்கை தொடங்கியது. பவர் பிளே ஓவர்களுக்கு பின் ஸ்பின்னர்கள் அட்டாக்கில் வர, சூர்யவன்ஷி விளாசி தள்ளினார். அதிலும் நூர் அஹ்மத் வீசிய ஓவரில் 6, 4, 4 என்று பறக்கவிட்டார். இதனால் 12 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணியின் ஸ்கோர் 121 ரன்களாக உயர்ந்தது.
துருவ் ஜுரெல் சம்பவம்
இந்த சூழலில் அஸ்வின் வீசிய 14வது ஓவரில் சாம்சன் 41 ரன்களிலும், சூர்யவன்ஷி 57 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் கடைசி 6 ஓவர்களில் ராஜஸ்தான் வெற்றிக்கு 50 ரன்கள் தேவைப்பட்டது. பின்னர் நூர் அஹ்மத் வீசிய ஓவரில் ரியான் பராக் ஆட்டமிழக்க, சிஎஸ்கே அணி வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்பட்டது.
ஆனால் அஸ்வின் வீசிய 17வது ஓவரில் 18 ரன்கள் சேர்க்கப்பட, பதிரானா வீசிய அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்து ராஜஸ்தான் வென்றது. இதன் மூலமாக ராஜஸ்தான் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்த போட்டியின் மூலமாக சிஎஸ்கே அணி கடைசி இடத்தில் நிறைவு செய்வதை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது.

