ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கான குவாலிஃபையர் முதல் ஆட்டத்தில் பஞ்சாப் அணியை எதிர்த்து ஆர்சிபி அணி களமிறங்கியது. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் பட்டிதர் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் களமிறங்கிய பஞ்சாப் அணி கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் அதிரடியாக விளையாட முயன்று விக்கெட்டை பறிகொடுத்தது.
ஆர்சிபி அதிரடி
இதனால் வெறும் 14.1 ஓவர்களில் பஞ்சாப் அணி 101 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. ஆர்சிபி அணி தரப்பில் சுயாஷ் சர்மா மற்றும் ஹேசல்வுட் இருவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன்பின் 102 ரன்கள் என்ற எளிய இலக்குடன் ஆர்சிபி அணிக்காக விராட் கோலி – பில் சால்ட் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. அர்ஷ்தீப் சிங் வீசிய முதல் ஓவரிலேயே விராட் கோலி 2 பவுண்டரிகளை விளாசி தள்ளினார்.
பின்னர் மீண்டும் 3வது ஓவரில் பில் சால்ட் சிக்ஸ், பவுண்டரி என்று விளாச, ஆர்சிபி அணி 3 ஓவர்கள் முடிவில் 30 ரன்களை எடுத்தது. இந்த நிலையில் ஜேமிசன் வீசிய 4வது ஓவரில் விராட் கோலி 12 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அந்த ஓவரில் ஜேமிசன் வீசிய பந்துகள் எக்குத்தப்பாக ஸ்விங்காக, ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
ஆர்சிபி சாதனை
ஆனால் ஓமர்சாய் வீசிய அடுத்த ஓவரிலேயே 2 பவுண்டரிகளை விளாசி ஆர்சிபி அணி கைகளை ஓங்கியது. இதன்பின் மயங்க் அகர்வாலும் அதிரடியில் விளாச, பில் சால்ட் பவுண்டரியாக பொளந்து கட்டினார். இதனால் 23 பந்துகளில் அரைசதம் அடிக்க, மயங்க் அகர்வால் 19 ரன்களில் வெளியேறினார். ஆனால் ஆர்சிபி அணி 8 ஓவர்களில் 85 ரன்கள் எடுத்திருந்ததால், ஆர்சிபி அணியின் வெற்றி உறுதி செய்யப்பட்டது.
இறுதியாக ரஜத் பட்டிதர் சிக்ஸ் அடித்து 10 ஓவர்களில் ஆட்டத்தை முடித்தார். இதன் மூலமாக ஆர்சிபி அணி ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு 4வது முறையாக முன்னேறி சாதனை படைத்துள்ளது. இன்னும் ஒரேயொரு போட்டில் வென்றாலே, ஆர்சிபி அணியின் 18 ஆண்டு கால கனவு நிறைவேறும் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

