சென்னையில் நடைபெற்று வந்த முதல் டெஸ்ட் போட்டி நான்காம் நாளான இன்றுடன் முடிவடைந்து இருக்கிறது. இந்தப் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. 158 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் இழந்திருந்த பங்களாதேஷ் அணி இன்று காலை 234 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியின் பந்து வீச்சில் ரவிச்சந்திரன் அஸ்வின் 6 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதன் மூலம் 147 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அஸ்வின் புதிய சாதனை படைத்திருக்கிறார்.
இந்தியா பங்களாதேஷ் மோதிய டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 376 ரன்கள் எடுத்தது. ரவிச்சந்திரன் அஸ்வின் சிறப்பாக விளையாடி சதம் எடுத்தார். இதனைத் தொடர்ந்து ஆடிய பங்களாதேஷ் 149 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனைத் தொடர்ந்து 227 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா இரண்டாவது இன்னிங்ஸில் 287 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. இதனைத் தொடர்ந்து 514 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பங்களாதேஷ் 234 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி தோல்வியை தழுவியது.
இந்தப் போட்டியில் இந்திய அணி 144 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் இழந்து தடுமாறிய போது தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் இணைந்து ஏழாவது விக்கெட்டுக்கு 199 ரன்கள் சேர்த்து இந்தியாவை சரிவிலிருந்து மீட்டனர். மிகச் சிறப்பாக பேட்டிங் செய்த அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தனது ஆறாவது சதத்தை பதிவு செய்தார். மேலும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அவர் எடுக்கும் இரண்டாவது சதம் இதுவாகும். இதற்கு முன்பு 2021 ஆம் வருடம் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியிலும் சதம் அடித்தார் அஸ்வின்
மேலும் இந்த டெஸ்ட் போட்டியின் நான்காம் நாளான இன்று பங்களாதேஷ் அணி 196 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்து வலுவான நிலையில் இருந்த போது தனது சுழற் பந்துவீச்சால் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் அஸ்வின். இதன் மூலம் ஒரே மைதானத்தில் 2 முறை 100 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகளுக்கு மேல் கைப்பற்றிய முதல் வீரர் என்ற சாதனையை அஸ்வின் படைத்துள்ளார். 147 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே மைதானத்தில் ஒரு வீரர் 2 முறை சதம் அடிப்பதும் 5 விக்கெட்டுகளுக்கு மேல் கைப்பற்றுவதும் இதுவே முதல் முறையாகும். பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த சாதனையை படைத்திருக்கிறார்.
இதற்கு முன்பு 2021 ஆம் வருடம் சென்னையில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 43 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்கள் வீழ்த்திய அஸ்வின் இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங்கில் சிறப்பாக விளையாடி 106 ரன்கள் குவித்தார். இதேபோன்று தற்போது சென்னையில் நடைபெற்ற பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 113 ரன்கள் எடுத்த அஸ்வின் இரண்டாவது இன்னிங்ஸில் 88 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார்.
147 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இது போன்ற ஒரு சாதனை நிகழ்த்தப்படுவது இதுவே முதல் முறையாகும். தமிழக வீரர் அஸ்வின் மட்டும் தான் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் ஒரே மைதானத்தில் ஒரே டெஸ்ட் போட்டியில் 2 முறை சதம் எடுத்ததோடு 5 விக்கெட்டுகளுக்கும் மேல் கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறார். மேலும் ஒரே டெஸ்ட் போட்டியில் அதிக முறை சதம் மற்றும் 5 விக்கெட்களுக்கு மேல் வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் ரவிச்சந்திரன் அஸ்வின் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.
இந்தப் பட்டியலில் இங்கிலாந்தைச் சேர்ந்த முன்னால் ஆல் ரவுண்டரான இயான் போத்தம் முதலிடத்தில் உள்ளார். இவர் 5 முறை ஒரு டெஸ்ட் போட்டியில் சதம் மற்றும் 5 விக்கெட் களுக்கு மேல் வீழ்த்தி இருக்கிறார். இவரைத் தொடர்ந்து அஸ்வின் 4 டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்ததோடு 5 விக்கெட் களுக்கு மேல் வீழ்த்தி இருக்கிறார். மேலும் இந்த பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் ஆல் ரவுண்டர் கேரி சோபர்ஸ், பங்களாதேஷ் அணியின் ஷகீப் அல் ஹசன், இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா மற்றும் தென்னாப்பிரிக்க வீரர் ஜாக் காலிஸ் ஆகியோர் 2 டெஸ்ட் போட்டிகளில் சதம் மற்றும் 5 விக்கெட் களுக்கு மேல் வீழ்த்தி மூன்றாம் இடத்தில் உள்ளனர்.

