இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் மைக் ஹெசன் எடுத்த தவறான முடிவுகள் இந்திய அணியின் வெற்றியை மிகவும் எளிமையாக மாற்றிவிட்டதாக இந்திய முன்னாள் வீரர் முகமது கைஃப் கூறியிருக்கிறார். மேலும் டாஸ் வென்றதிலிருந்து அடுத்து பந்து வீச்சாளர்களை பயன்படுத்தியது வரை ஒட்டு மொத்தமாக பாகிஸ்தானின் தலைமை பயிற்சியாளர் எடுத்த தவறான முடிவுகள் அந்த அணியை வீழ்த்தி விட்டதாகவும், மேலும் அவர் பயிற்சியாளர் பொறுப்பில் இலவசமாக பணத்தை வாங்கிக் கொண்டிருக்கிறார் என்றும் விமர்சனம் செய்திருக்கிறார்.
இதுகுறித்து முகமது கைஃப் பேசும்பொழுது ” இந்த உலகக் கோப்பை தொடருக்கு கேப்டனாக சல்மான் அலி ஆகா மிகவும் இளையவர். அவருக்கு நிறைய சந்தேகங்கள் முடிவெடுப்பதில் இருப்பது சகஜமான விஷயம்தான். ஆனால் பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் உலகெங்கும் பல இடங்களில் பொறுப்பில் இருந்திருக்கிறார். அவருக்கு ஐபிஎல் தொடரிலும் ஆர்சிபி அணிக்கு பணியாற்றிய அனுபவம் இருக்கிறது. இப்படி இருக்கும் பொழுது அவர்தான் சரியான முடிவுகளை எடுத்து இருக்க வேண்டும். ஆனால் அவர் பல விஷயங்களில் மோசமான முடிவுகளையே எடுத்தார்”
“முதலில் மெதுவான ஆடுகளத்தில் டாஸ் வென்றால் பேட்டிங் செய்ய வேண்டும் என்பது அடிப்படையான விதி. ஆனால் அவர் பாகிஸ்தானை பந்து வீச்சுக்கு அழைத்துச் சென்றார். அடுத்து அப்ரார் அகமதுவை பவர் பிளேவில் கொண்டு வந்தார் அவருக்கு அடி விழுந்ததும், அடுத்து அவரைக் கொண்டே வரவில்லை. மேலும் உஸ்மான் தாரிக் பற்றி நிறைய பில்டப் செய்தார்கள். ஆனால் அவரை இவர் ஏழாவது பவுலராக கொண்டு வந்தார். உலகெங்கும் வேலை செய்த இவர் சரியாக செயல்படாவிட்டால் யார் செயல்படுவது? ஒட்டுமொத்தமாக இவர்தான் எல்லா பிரச்சனைக்கும் காரணம்” என்று கூறியிருக்கிறார்.

