ஐபிஎல் தொடரின் 8வது லீக் போட்டியில் ஐதராபாத் அணியை எதிர்த்து லக்னோ அணி விளையாடியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 190 ரன்களை விளாசியது. லக்னோ அணி தரப்பில் ஷர்துல் தாக்கூர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
மிரட்டிய நிக்கோலஸ் பூரன்
இதன்பின் களமிறங்கிய லக்னோ அணிக்கு மார்க்ரம் – மிட்சல் மார்ஷ் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. முகமது ஷமி வீசிய 2வது ஓவரிலேயே மார்க்ரம் 1 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேற, மிட்சல் மார்ஷ் – பூரன் கூட்டணி இணைந்தது. நிக்கோலஸ் பூரன் தொடக்கம் முதலே அதிரடியில் மிரட்டினார். சிமர்ஜித் சிங் வீசிய 3வது ஓவரிலேயே 17 ரன்களையும், ஷமி வீசிய 4வது ஓவரில் 18 ரன்களையும் விளாசினார்.
பின் அபிஷேக் சர்மா வீசிய 5வது ஓவரில் 2 சிக்ஸ் உட்பட 17 ரன்களை விளாச, லக்னோ அணி 6 ஓவர்களிலேயே 77 ரன்களை விளாசியது. தொடர்ந்து ஜாம்பா வீசிய 7வது ஓவரில் 19 ரன்களை விளாசியதோடு, பூரன் அரைசதத்தையும் கடந்தார். 8வது ஓவரிலேயே 111 ரன்களை லக்னோ அணி எட்டியது. அதிரடியாக ஆடிய பூரன் 26 பந்துகளில் 70 ரன்களை விளாசி கம்மின்ஸ் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
ஐதராபாத் சோகம்
இன்னொரு பக்கம் மிட்சல் மார்ஷ் அதிரடியாக பவுண்டரிகளை விளாசி அரைசதம் கடந்ததோடு, 52 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த பதோனி 6 ரன்களிலும், ரிஷப் பண்ட் 15 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இருந்தாலும் தேவையான ரன் ரேட் எளிதாக இருந்ததால், லக்னோ அணி நிதானமாக விளையாடியது. அழுத்தம் இல்லாததால் அப்துல் சமத் சிக்ஸ், பவுண்டரி என்று விளாசினார்.
இறுதியாக 16.1 ஓவர்களில் லக்னோ அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 193 ரன்கள் எடுத்து அபார வெற்றியை பெற்றது. சிறப்பாக ஆடிய அப்துல் சமத் 8 பந்துகளில் 22 ரன்களை விளாசி தள்ளினார். இதன் மூலமாக லக்னோ அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்து அசத்தியுள்ளது. அதேபோல் சொந்த மண்ணிலேயே ஐதராபாத் அணி தோல்வியை சந்தித்துள்ளது.

