பரபரப்பாக நடந்த 2025 ஐ.பி.எல் ஏலத்தில் பல்வேறு திருப்பங்கள், ஆச்சர்யங்கள். அதில் ஒன்று தான் கொல்கத்தா அணி வெங்கடேஷ் ஐயரை மிகப் பெரிய தொகைக்கு கைப்பற்றியது.
நேற்று நடந்த முதல் நாள் ஏலத்தில் வெங்கடேஷ் ஐயரை வாங்க பெங்களூர் அணியும் கொல்கத்தாவும் விடாமல் ஏலம் கேட்டுக் கொண்டே இருந்தனர். யாரும் எதிர்பார்க்காத வகையில் விலை 20 கோடிக்கு மேல் போனது. இறுதியில் வெங்கடேஷ் ஐயரை அவரது அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ்ஸே 23.75 எனும் இமாலயத் தொகைக் கொடுத்து வாங்கியது.
வெறும் 51 கோடி மட்டுமே வைத்துக் கொண்டு அதில் பாதி பணத்தை ஒரு வீரரின் மேல் மட்டுமே கொலத்தா போட்டது பெரிய ஆச்சர்யம். அதற்கான காரணம் என்னவென்று அணியின் சிஇஓ பேசியுள்ளார். ஏலத்திற்கு முன்பு வெங்கடேஷ் ஐயரிடம் பேசியதன் பின்பு அவரை எடுத்தாக வேண்டும் என்ற முடிவுக்கு வந்ததாகக் கூறினார்.
அவர் பேசியதாவது, ” நாங்கள் கடந்த ஆண்டு ஆடிய வீரர்களை பெரும்பாலும் எடுத்துவிட வேண்டுமென இருந்தோம். ஏற்கனவே 6 வீரர்களை தக்க வைத்துக் கொண்டு, மீதம் 2/3 வீரர்களை திருப்பி எடுத்துள்ளோம். அதில் மிக முக்கிய வீரர் தான் வெங்கடேஷ் ஐயர். அவரை எந்த ஒரு சூழ்நிலையிலும் தவற விடவேக் கூடாது என்ற முடிவில் நாங்கள் இருந்தோம். “
” டீ காக் (3.6 கோடிகள்), நோர்க்கியா (6.5 கோடிகள்) இருவரின் குறைந்த விலையை வைத்து வெங்கடேஷ் ஐயரின் பெரிய தொகையை ஈடு கட்டினோம். கடந்த ஆண்டு ஃபைனல், 2021 ஆண்டு ஃபைனல், பிளேஆப்ஸ் என வெங்கடேஷ் ஐயர் பல முறை திறனை நிரூபித்துள்ள அதிரடியான ஆட்டக்காரர். ஏலத்திற்கு முன்பு பேசிய போது, தன்னை மீண்டும் எடுக்கவில்லை என்றால் மிகவும் வருத்தமாக இருக்கும் என வெங்கடேஷ் ஐயர் கூறினார். அவரை வருத்தத்தில் ஆழ்தக் கூடாது என நினைத்தோம், எங்களுக்கும் இப்போது சந்தோஷம் தான். ” என்றார் சிஇஓ வென்கி மைசூர்.
கொல்கத்தா அணி ரிங்கு சிங், வருன் சக்ரவர்த்தி, ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், ஹர்ஷித் ராணா, வைபவ் அரோரா, ரமந்தீப் சிங், ரகுவன்ஷி என ஓரளவு அவர்களது வீரர்களை மீண்டும் வாங்கிவிட்டது. பெரிய தொகைக்கு எடுக்கப்பட்ட வெங்கடேஷ் ஐயர் புதிய கேப்டனாக இருப்பார் என பேச்சுக்கள் சமூக வலைத்தளத்தில் போய்க் கொண்டுள்ளது. கொல்கத்தா அணியும் விடாப்பிடியாக 23.75 கோடிகள் கொடுத்து எடுத்துள்ளதால் காரணம் இருக்கவும் வாய்ப்புள்ளது.

