2025 ஐ.பி.எல் தொடர் வருகிற மார்ச் 22ஆம் தேதி துவங்குகிறது. பிரம்மாண்ட கிரிக்கெட் திருவிழாவுக்கு இன்னும் 2 வாரமே இருக்கும் நிலையில் மும்பை இந்தியன்ஸ் நட்சத்திர பவுலர் ஜஸ்பிரித் பும்ரா இத்தொடரில் பங்கேற்பாரா இல்லையா என்பது குறித்த குழப்பம் இன்னும் நீடித்து வருகிறது. தற்போது அதுப் பற்றிய ஓர் அப்டேட் வெளியாகி உள்ளது.
இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடரில் அயராது உழைத்து இந்திய அணியின் முதுகெலும்பாக திகழ்ந்த பும்ரா, கடைசி டெஸ்ட் போட்டியில் காயமடைந்தார். 5வது டெஸ்ட் போட்டியின் 2ஆம் நாளில் முதுகு அவதியால் விலகினார். அதன் பின்னர் அதற்கான சிகிச்சையில் அவர் உடனடியாக ஈடுபட்டார். இதன் காரணமாக அவர் நடந்து வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க இயலவில்லை.
பெங்களூருவில் இருக்கும் பிசிசிஐ முகாமில் மருத்துவர்கள் கண்காணிப்பில் பும்ரா உள்ளார். கொஞ்சம் கொஞ்சமாக அவர் பந்துவீசத் துவங்கியுள்ளார். விரைவில் துவங்கவிருக்கும் ஐ.பி.எல் தொடரில் அவர் உடனே களமிறங்குவது சாத்தியமில்லை என மருத்துவர்கள் கூறியுள்ளனர். எனினும், ஏப்ரல் 2ஆம் வாரத்தில் தான் அவர் முழு உடல் தகுதியுடன் களத்திற்கு திரும்புவார் என நம்பிக்கைக் கொடுத்துள்ளனர்.
இதன் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் போட்டியில் பும்ரா இல்லாதது சற்று பின்னடைவு தான். ஐ.பி.எல் தொடரை விட இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் தான் பிசிசிஐ முழு கவனம் செலுத்தி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த ஓவர்சீஸ் டெஸ்ட் தொடரில் பும்ராவின் இருப்பு மிக மிக அவசியம் என்பதால், அவரின் உடல்நிலையில் பிசிசிஐ கண்ணாக உள்ளது. ஒரு வேளை ரிஸ்க் எடுக்க வேண்டாம் என விரும்பினால் ஐ.பி.எல் தொடரில் பும்ராவை விளையாட வைக்காமல் ஓய்வில் நீடிக்கச் செய்யவும் வாய்ப்புள்ளது.

