2023 ஆம் ஆண்டில் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் முதல் போட்டியில் உலக சாம்பியன் இங்கிலாந்து அணியை நியூசிலாந்து அணி அபாரமாக வெற்றி பெற்றது. இந்த உலகக் கோப்பை நான்காவது போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி இலங்கை அணிக்கு எதிராக உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் வரலாற்றில் அதிக ரன்களை பதிவு செய்தது.
நேற்றைய தினம் இரண்டு போட்டிகள் நடைபெற்றன இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி பங்களாதேஷ் அணியை 137 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. மேலும் இந்த வெற்றியின் மூலம் தனது உலகக்கோப்பை கணக்கையும் தொடங்கி இருக்கிறது நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து. ஹைதராபாத்தில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் பாகிஸ்தான் அணி இலங்கை அணி எதிர்த்து விளையாடியது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்து 344 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் குஷால் மெண்டிஸ் மற்றும் சமரவிக்ரமா இருவரும் சிறப்பாக விளையாடி சதம் எடுத்தனர். இதனைத் தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி ஆரம்பத்தில் இரண்டு விக்கெட் களை இழந்தாலும் அப்துல்லா ஷபிக் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 48.2 ஓவர்களில் 345 ரன்கள் எடுத்து ஆரம்பிக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த உலகக் கோப்பையில் தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்திருக்கிறது.
களம் இறங்கியது முதலே சிறப்பாக விளையாடிய முகமது ரிஸ்வான் 121 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 131 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். அவர் இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். சிறப்பாக விளையாடிய ரிஸ்வான் தனது சதத்தை நெருங்கிக் கொண்டிருந்த வேளையில் அதிக வெப்பநிலை காரணமாக அவருக்கு தசை பிடிப்பு ஏற்பட்டது. இதனால் ரன் ஓடுவதற்கு மிகவும் சிரமப்பட்டதோடு பந்துகளை எதிர்த்து ஷாட் விளையாடவும் மிகவும் சிரமப்பட்டார்.
எனினும் தசை பிடிப்பு மற்றும் சுளுக்கு ஆகியவற்றை பொறுத்துக் கொண்டு தனது நாட்டிற்காக விளையாடி இறுதிவரை ஆட்டம் விளக்காமல் இருந்து அணியை வெற்றி பெறச் செய்தார். இது தொடர்பாக ஆட்டநாயகன் விருது பெற்றபோது பேசிய அவர் தனக்கு சுளுக்கினால் ஏற்பட்ட வலி சில நேரங்களில் உண்மையாக இருந்ததாகவும் சில நேரங்களில் தான் நடித்ததாகவும் கூறி இருப்பது ரசிகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இது தொடர்பாக பேசியிருக்கும் ரிஸ்வான் ” நாட்டின் வெற்றிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது எப்போதுமே பெருமையான ஒன்று. இந்தக் கணத்தில் எனக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை. ஆடுகளத்தில் மிகவும் கடுமையான சூழல் நிலவியது. எங்களது பந்து வீச்சிற்கு பிறகு இலங்கை அணியின் இலக்கை எட்டிப்பிடித்து வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கையுடன் இருந்தோம்” என்று தெரிவித்திருக்கிறார்.
மேலும் தொடர்ந்து பேசிய முகமது ரிஸ்வான் ” துரதிஷ்டவசமாக கேப்டன் பாபர் அசாம் விரைவாக அவுட் ஆனார். இருந்தாலும் நாங்கள் சிறப்பாக விளையாடிய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றோம். ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தது எங்களது பணியை எளிதாக்கியது. நான் ஆட வந்த போது அப்துல்லா ஷபிக்கிடம் படிப்படியாக அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லலாம் என்று கூறினேன். எனக்கு தசை பிடிப்பு மற்றும் சுளுக்கு இருந்தது. சில நேரங்களில் அது உண்மையாக இருந்தது சில நேரங்களில் அது இருப்பது போல் நான் காட்டிக் கொண்டேன் என நகைச்சுவையுடன் தெரிவித்து இருக்கிறார்.