தற்போது நடைபெற்று வரும் 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் துவக்கம் முதலே இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்தியா விளையாட்டு இருக்கும் 8 போட்டிகளிலும் 8 வெற்றிகளுடன் 16 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் இருப்பதோடு முதல் அணியாகவும் அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
மேலும் இந்தியா விளையாடிய அனைத்து போட்டிகளிலும் ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்றிருக்கிறது. இலங்கை அணியை 55 ரன்களிலும் தென்னாப்பிரிக்கா அணியை 83 ரண்களிலும் ஆல் அவுட் செய்து உலகக்கோப்பை வரலாற்றில் மிகப்பெரிய வெற்றிகளை பதிவு செய்திருக்கிறது. இந்திய அணியின் இந்த எழுச்சி மற்றும் ஆதிக்கம் உலக அளவில் கிரிக்கெட் விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டாலும் ஒரு சிலர் இந்தியாவின் மீது குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து வருகின்றனர்.
குறிப்பாக பாகிஸ்தான் மற்றும் இலங்கை நாடுகளைச் சேர்ந்த முன்னாள் வீரர்களும் அரசியல் பிரமுகர்களும் பிசிசிஐ சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு இந்திய அணிக்கு சாதகமான முடிவுகளை உலக கோப்பையில் எடுத்து வருவதாக குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஹசன் ராசா டிஆர்எஸ் விதிகளை இந்தியா தனக்கு சாதகமாக பயன்படுத்துவதாகவும் ஐசிசி பிசிசிஐயுடன் கூட்டணி அமைத்துக் கொண்டு இந்திய பந்துவீச்சாளருக்கு சாதகமாக பந்துகளை வழங்குவதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில் இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இந்தியா மற்றும் இலங்கை அணி களுக்கிடையே மும்பையில் நடைபெற்ற போட்டியின் போது டாஸ் வென்று இலங்கை முதலில் பந்து வீசியது தொடர்பாக புதிய குற்றச்சாட்டு ஒன்றை தெரிவித்திருக்கிறார். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் பாராளுமன்றத்தில் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் இந்த விஷயத்தில் இலங்கை அணியின் முன்னாள் கேப்டனையும் தொடர்பு படுத்தி அவர் புகார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இலங்கை நாடாளுமன்றத்தில் பேசியிருக்கும் எம்பி விமல் வீரசண்கா இலங்கை அணி நாணய சுண்டுதலில் வெற்றி பெற்று முதலில் பந்துவீச்சை ஏன் தேர்வு செய்தது என கேள்வி எழுப்பி இருக்கிறார். மேலும் டாஸ் வென்று முதலில் பந்து வீச வேண்டும் என தீர்மானித்தது இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் மகிலா ஜெயவர்த்தனா தான். அவர் ஏன் அவ்வாறு ஒரு முடிவை எடுக்க வேண்டும். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்திருக்கிறார்.
மேலும் இது தொடர்பாக பேசியிருக்கும் அவர் பிசிசிஐ தனது பண பலத்தைக் கொண்டு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலை ஆட்டுவித்து வருகிறது எனவும் பரபரப்பான குற்றச்சாட்டை பதிவு செய்திருக்கிறார். இந்திய அணியும் அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்ய விரும்பியது. எனவே எதன் அடிப்படையில் மகிலா ஜெயவர்த்தனா டாஸ் வென்று முதலில் பந்து வீச வேண்டும் என குஷால் மெண்டிஸிற்கு அறிவுரை வழங்கியதாக கேள்வி எழுப்பி இருக்கிறார். இது தொடர்பாக பரஸ்பரம் அற்ற தெளிவான நீதி விசாரணை வேண்டும் எனவும் அவர் பாராளுமன்றத்தில் வாதிட்டுள்ளார்.
இலங்கை அணி இந்திய அணியுடன் ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் 50 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. தற்போது நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியிலும் இந்திய அணி 357 ரன்கள் எடுத்த நிலையில் இரண்டாவது பேட்டிங் செய்த இலங்கை 55 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி உலகக்கோப்பையில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அணி என்ற மோசமான சாதனையிலும் இடம் பெற்றது. இது இலங்கை கிரிக்கெட் வட்டாரத்தில் மிகப்பெரிய புயலை ஏற்படுத்தியது. இது தொடர்பாக மொத்த இலங்கை கிரிக்கெட் வாரியத்தையும் சஸ்பெண்ட் செய்தார் இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சர். பின்னர் நீதிமன்றம் தலையிட்டு இதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

