இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான டி20 தொடரை இந்தியா 3-0 என்ற வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒரு நாள் போட்டி கொழும்பு பிரேமதாசா விளையாட்டு மைதானத்தில் வைத்து இன்று நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இலங்கை அணிக்காக தமிழ் வீரர் களம் இறங்க இருக்கிறார்.
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரில் விளையாட தேர்வு செய்யப்பட்ட இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் மதீஷா பத்திரானா மூன்றாவது t20 போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக அணியில் இருந்து வெளியேறினார். இவருக்கு பதிலாக இலங்கை உள்நாட்டுப் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வந்த கண்டியைச் சேர்ந்த தமிழ் வீரரான முகமது ஷிராஸ் தேர்வு செய்யப்பட்டார்.
15 பேர் கொண்ட இலங்கை அணியில் தேர்வு செய்யப்பட்டிருந்த முகமது ஷிராஸ் இந்தியா அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் ஆடும் வாய்ப்பை பெற்றுள்ளார். கடந்த 2016 ஆம் வருடம் முதல் இலங்கை முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வரும் முகமது ஷிராஸ் தற்போது சர்வதேச போட்டியில் களம் இறங்கி இருக்கிறார். துவக்கத்தில் கோல்ட்ஸ் கிரிக்கெட் கிளப்பிற்காக களமிறங்கிய முகமது ஷிராஸ் தற்போது இலங்கை முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் பர்கர் கிரிக்கெட் கிளப்பில் விளையாடி வருகிறார்.
சிறந்த வேகபந்துவீச்சாளரான இவரை நீண்ட நாட்களாக இலங்கை அணிக்கு தேர்வு செய்யப்படவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு இருந்தது. தற்போது முகமத் ஷிராஸ்க்கு முதல் முறையாக வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. திறமை மிகுந்த வேகப்பந்து வீச்சாளரான இவர் 47 லிஸ்ட் ஏ போட்டிகளில் விளையாடி 80 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார். லிஸ்ட்டியே கிரிக்கெட் போட்டிகளில் இவரது பந்துவீச்சு சராசரி 17.52 ஆக இருக்கிறது.
மேலும் 49 முதல் தரப் போட்டிகளில் விளையாடி இருக்கும் முகமது ஷிராஸ் 125 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார். முதல் தரப் போட்டிகளில் இவரது சராசரி 31 ஆகும். மேலும் இலங்கை உள்நாட்டு டி20 கிரிக்கெட் போட்டிகளில் 23 மேட்சுகளில் விளையாடி 23 விக்கெட்டுகள் வீழ்த்தி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
2016 ஆம் ஆண்டு இலங்கை உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் கோல்ட்ஸ் கிரிக்கெட் கிளப்பிற்காக அறிமுகமான இவர் 2023 ஆம் ஆண்டு வரை அந்த அணிக்காக விளையாடினார். 2024 ஆம் வருடத்தில் இருந்து தற்போது வரை இலங்கை பர்கர் கிரிக்கெட் கிளப்பில் முகமது ஷிராஸ் விளையாடி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தனது திறமையின் காரணமாக 2019 ஆம் வருடம் தென்னாப்பிரிக்கா சென்ற இலங்கை அணியில் முகமது ஷிராஸ் இடம் பெற்று இருந்தார். எனினும் போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்பு அவருக்கு வழங்கப்படவில்லை. தற்போது முன்னணி வீரர்கள் காயமடைந்திருக்கும் சூழலில் முகமது ஷிராஸ் தனது சர்வதேச அறிமுக போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெற்றிருக்கிறார்.

