தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரின் ஒன்பதாவது போட்டியில் இன்று இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் வைத்து நடைபெற்றது . டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இந்த அணியின் இப்ராஹீம் ஜத்ரான் 22 ரன்களிலும் ரஹ்மத்துல்லாஹ் குர்பாஸ் 21 ரன்களிலும் ரஹ்மத் ஷா 16 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். இதனைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த கேப்டன் ஹஸ்மத்துல்லா ஷஹீதி மற்றும் அஸ்மத் உமர்ஷாய் ஆகிய இருவரும் நான்காவது விக்கெட்க்கு ஜோடி சேர்ந்த மிகச் சிறப்பாக விளையாடினர். அரை சதத்தை கடந்த இவர்கள் இருவரது அதிரடி ஆட்டத்தால் ஆப்கானிஸ்தான் அணி 300 ரன்களுக்கு மேல் குவிக்கும் நிலையில் இருந்தது.
இந்நிலையில் 69 பந்துகளில் 62 ரன்களுடன் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த உமர்ஷாய் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். இவரைத் தொடர்ந்து முஹம்மது நபி 19 ரன்களிலும் நஜிபுல்லா 2 ரன்களிலும் ரஷித் கான் 16 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். சிறப்பாக விளையாடிய கேப்டன் ஷஹீதி 88 பந்துகளில் 1 சிக்சர் மற்றும் 8 பவுண்டரிகளுடன் 80 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் பந்துவீச்சில் ஜஸ்ப்ரீத் பும்ரா 4 விக்கெட்டுகளையும் ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து 273 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீரர்களான கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் இசான் கிஷான் இருவரும் சிறப்பான துவக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா தனது அரை சதத்தை பூர்த்தி செய்ததோடு இந்த உலகக்கோப்பை போட்டியில் தனது முதல் சதத்தையும் மொத்தமாக உலகக் கோப்பை போட்டிகளில் ஏழாவது சதத்தையும் நிறைவு செய்தார். மேலும் உலகக்கோப்பை போட்டிகளில் அதிவேக சதம் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்தார் . இவர் 63 பந்துகளில் தனது சதத்தை பூர்த்தி செய்தார். இதன் மூலம் 2007 ஆம் ஆண்டு பெர்முடா அணிக்கு எதிராக விரேந்தர் சேவாக் புரிந்த சாதனையை முறியடித்தார்.
இந்தப் போட்டியில் ரோகித் சர்மா ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தனது 31 வது சதத்தை நிறைவு செய்து இருக்கிறார். இதன் மூலம் சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலிக்கு அடுத்தபடியாக ஒரு நாள் போட்டிகளில் அதிக சதம் எடுத்த வீரர் என்ற சாதனையையும் படைத்திருக்கிறார். மேலும் உலகக் கோப்பை போட்டிகளில் அதிக சதம் எடுத்த வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். இதற்கு முன்பு சச்சின் டெண்டுல்கரிடமிருந்த இந்த சாதனை தற்போது ரோகித் சர்மாவால் முறியடிக்கப்பட்டு இருக்கிறது.
சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா 84 பந்துகளில் 131 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதில் 5 சிக்ஸர்களும் 16 பௌண்டரிகளும் அடங்கும் . இந்தப் போட்டியில் ரோகித் சர்மா மேலும் ஒரு சாதனையாக மேற்கிந்திய தீவுகள் வீரர் க்ரிஷ் கெயில் சாதனையை முறியடித்திருக்கிறார் . ரோகித் சர்மா இன்றைய போட்டியில் 5 சிக்ஸர்கள் எடுத்ததன் மூலம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 556 சிக்ஸர்கள் அடித்திருக்கிறார். இதன் மூலம் க்ரிஷ் கெயில் எடுத்த 551 சிக்ஸர்கள் என்ற சாதனை முறியடிக்கப்பட்டு இருக்கிறது.
இவரைத் தொடர்ந்து விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் மூன்றாவது விக்கெட்டுக்கு 68 ரன்கள் பார்ட்னர்ஷிப்பாக சேர்த்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். விராட் கோலி 55 ரன்கள்டனும் ஸ்ரேயாஸ் ஐயர் 25 ரன்கள்டனும் களத்தில் நின்றனர். இந்திய அணி 35 ஓவர்களில் 273 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது . இதனைத் தொடர்ந்து வருகின்ற சனிக்கிழமை நடைபெற இருக்கும் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள உள்ளது .