ஐபிஎல் தொடரின் மினி ஏலமானது, துபாயில் உள்ள கொககோலா மைதானத்தில், இன்னும் சில மணி நேரங்களில் தொடங்க உள்ளது. இந்த ஏலத்தில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 333 வீரர்கள் பங்கேற்கின்றனர். ஒவ்வொரு அணியும் தங்களுக்குத் தேவையான வீரர்களை வாங்கி கட்டமைத்துக் கொள்ளும்.
ஆனால் மெகா ஏலத்தின் போது ஐபிஎல் அணிகள் இந்திய வீரர்களுக்கு தயங்காமல் அதிக தொகையை செலவழிக்கும். ஏனெனில் 11 பேர் கொண்ட அணியில் இந்திய வீரர்கள் மட்டுமே 7 பேர் இடம் பெறுவர். வெளிநாட்டு வீரர்கள் 4 பேரை வைத்துக் கொள்ள மட்டுமே அனுமதி உண்டு. எனவே பெரும்பாலான இந்திய வீரர்களை வைத்து அணிகள் கட்டமைப்பு நிகழும்.
வெளிநாட்டு வீரர்களைப் பொருத்தவரை ஒவ்வொரு அணியும் இரண்டு அல்லது மூன்று பெரிய வீரர்களுக்கு மட்டுமே அதிக தொகை செலவழிக்கும். மற்ற வெளிநாட்டு வீரர்களுக்கு குறைந்த தொகையிலேயே ஏலத்தை முடித்து விடும். ஆனால் மினி ஏலத்தைப் பொருத்தவரை ஒவ்வொரு அணியும் தங்கள் தேவைக்கேற்ப இரண்டு அல்லது மூன்று வீரர்களுக்கு பெரிய தொகை கொடுக்க முன்வரும்.
இந்திய வீரர்கள் பெரும்பாலும் தக்க வைத்துக் கொள்ளப்படுவார்கள் என்பதால் அவர்களுக்கு அதிக தொகை செலவழிக்க வாய்ப்பில்லை. இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா அணி வீரர்கள் 20 பேர் மினி ஏலத்தில் தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளனர்.
ஆனால் மெகா ஏலத்திற்கு இவர்கள் பெரும்பாலும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஆஷஸ் மற்றும் பெரிய தொடர்களை காரணம் காட்டி மெகா ஏலத்தை புறக்கணித்து விடுகின்றனர். இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கருத்து தெரிவிக்கையில்,
” கிரிக்கெட்டைப் பொறுத்தவரை மற்ற தொழில்களைப் போல நீண்ட வருடம் நிலைத்திருக்க முடியாது.
கிரிக்கெட் வீரர்கள் சில வருடங்கள் மட்டுமே விளையாட முடியும். எனவே அவர்கள் குறுகிய காலத்திற்குள் சம்பாதிக்க நினைப்பது தவறில்லை.
ஆனால் ஐபிஎல் தொடரில் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்கும் போது சிறிய தொகையுடன் விளையாடுவதில் அவர்கள் தயங்குகிறார்கள் என்று நினைக்கிறேன். அதேபோல சிறிய தொகைக்கு ஏலம் எடுத்தால் அவர்கள் வர முடியாது என்று எளிதாக கூறி விடுகிறார்கள்.
குறிப்பாக ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் இதனைத் தொடர்ச்சியாக செய்து வருகிறது. மெகா ஏலத்தில் பங்கேற்காமல் மினி ஏலத்தில் பங்கேற்பது அவர்களுக்கு தற்போது வாடிக்கையாகி விட்டது. இதற்கு தகுந்தார் போல் ஏதாவது செய்ய வேண்டும்”என்று கூறி இருக்கிறார். மினி ஏலமானது இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளதால் எந்தெந்த வீரர்கள் எவ்வளவு தொகைக்கு போகிறார்கள் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.