அஜித் அகர்கர் தலைமையிலான இந்திய தேர்வுக்குழுவின் எதிர்காலம் குறித்து தற்போது கேள்வி எழுந்துள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ODI மற்றும் T20I தொடர்களுக்கான இந்திய அணியை தேர்வு செய்வதற்காக செப்டம்பர் 16-ம் தேதி நடைபெறும் கூட்டம், தலைமைத் தேர்வாளராக அகர்கரின் கடைசி கூட்டமாக இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அகர்கரின் தற்போதைய ஒப்பந்தம் அக்டோபர் 4, 2026 வரை மட்டுமே உள்ளது. அவருடைய பதவிக்காலத்தை மேலும் ஓராண்டு நீட்டிப்பது குறித்து இதுவரை BCCI-யின் உயர்மட்ட நிர்வாகத்திடமிருந்து அவருக்கு எந்த தகவலும் வரவில்லை என பல்வேறு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 2027 ODI உலகக் கோப்பை வரை பதவியில் தொடர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அகர்கரிடம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
மூன்று ஆண்டுகளில் இந்தியாவின் வெள்ளைப் பந்து வெற்றி
2023 ஜூலை மாதம் ஆண்கள் தேர்வுக்குழுத் தலைவராக பொறுப்பேற்ற அகர்கர் காலத்தில், இந்திய அணி வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்றது. 2024 மற்றும் 2026 T20 உலகக் கோப்பைகள், 2025 சாம்பியன்ஸ் டிராபி என மூன்று ICC கோப்பைகளை இந்தியா வென்றுள்ளது. அதே நேரத்தில், விராட் கோலி, ரோஹித் சர்மா, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரின் ஓய்வுக்குப் பிறகு டெஸ்ட் அணியில் ஏற்பட்ட மாற்றக் காலத்திலும் தேர்வுக்குழு செயல்பட்டது.
மேற்கிந்திய தீவுகள் தொடருக்கான தேர்வு கூட்டத்தில் ODI மற்றும் T20I அணிகள் குறித்து முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. செப்டம்பர் 27 முதல் தொடங்கும் இந்த வெள்ளைப் பந்து தொடரில் இந்தியா 3 ODI மற்றும் 5 T20I போட்டிகளில் விளையாடுகிறது. ODI அணியை இறுதி செய்யும்போது ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, ருதுராஜ் கெய்க்வாட், ரஜத் படிதார் உள்ளிட்ட வீரர்களின் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், BCCI-யின் சமீபத்திய ஆய்வுக் கூட்டத்தில் அகர்கர் பங்கேற்காதது குறித்தும் முன்னதாக கேள்விகள் எழுந்தன. அவர் வெளியூரில் இருந்ததால் குறுகிய அறிவிப்பில் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை என்றும், ஆன்லைனிலும் இணைய முடியாத சூழல் இருந்ததாக BCCI செயலாளர் தேவஜித் சைகியா விளக்கம் அளித்திருந்தார்.
தற்போதைய தகவல்படி, அகர்கரை மாற்றுவது குறித்து BCCI அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஆனால் மேற்கிந்திய தீவுகள் அணித் தேர்வு கூட்டத்துக்கு பிறகு, BCCI செயலாளர் தேவஜித் சைகியாவுக்கு மூன்று ஆண்டுகள் பணியாற்ற வாய்ப்பு வழங்கியதற்காக நன்றி தெரிவித்து ஒரு மின்னஞ்சல் அனுப்பலாம் என அகர்கர் தனக்கு நெருக்கமானவர்களிடம் தெரிவித்ததாக PTI மேற்கோளிட்டு செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் அவரது அடுத்தகட்ட நிலை குறித்து அதிகாரப்பூர்வ முடிவுக்காக கவனம் திரும்பியுள்ளது.

