தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி மூன்று போட்டிகளை கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் இரண்டாவது t20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதனைத் தொடர்ந்து இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் இறுதி டி20 போட்டி இன்று ஜோகன் பெர்க் நகரில் அமைந்துள்ள வாண்டரர்ஸ் பார்க் மைதானத்தில் வைத்து நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரர் கில் 8 ரன்னிலும் திலக் வர்மா ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டம் இழந்து அதிர்ச்சி அளித்தனர். எனினும் மூன்றாவது விக்கெட் ஜோடி சேர்ந்த கேப்டன் சூர்யா குமார் யாதவ் மற்றும் இன்னொரு துவக்க வீரரான ஜெய்ஸ்வால் இருவரும் இணைந்து இந்திய அணிக்கு சிறப்பான அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர்.
ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் தனது அரை சதத்தை நிறைவு செய்தார். இவரைத் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய சூரியகுமார் யாதவும் இந்தத் தொடரில் தனது இரண்டாவது அரை சதத்தை பூர்த்தி செய்தார். இவர்கள் இருவரும் சேர்ந்து மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடியாக 115 ரன்கள் சேர்த்தனர். அதிரடியாக விளையாடிய ஜேசுவால் 41 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகளுடன் 60 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
இவரைத் தொடர்ந்து ரிங்கு சிங் 4 ரன்னில் அவுட் ஆனார். எனினும் சிறப்பாக விளையாடிய இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் 55 பந்துகளில் தனது சதத்தை பூர்த்தி செய்தார். இது டி20 போட்டிகளில் அவர் எடுக்கும் நான்காவது சதமாகும். இதனைத் தொடர்ந்து 56 பந்துகளில் 8 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகளுடன் 100 ரன்னில் ஆட்டம் இழந்தார். இவரது அதிரடியான ஆட்டத்தால் இந்தியா 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்தது.
இதனைத் தொடர்ந்து களம் இறங்கிய தென்னாப்பிரிக்கா அணியின் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். அந்த அணியின் துவக்க வீரர் பிரட்ஸ்கி நான்கு ரன்களும் மற்றொரு துவக்க வீரரான ஹென்றிக்ஸ் 8 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். இவர்களைத் தொடர்ந்து களம் இறங்கிய அதிரடி வீரர் கிலாசன் 5 ரன்னில் அவுட் ஆனார். தென் ஆப்பிரிக்கா அணியில் கேப்டன் மார்கரம் 14 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மேலும் அதிரடி வீரர் டேவிட் மில்லர் 25 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரண்களில் ஆட்டம் இழந்தனர். தென்னாப்பிரிக்கா 13.5 ஓவர்களில் 95 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணியின் பந்துவீச்சில் குல்தீப் யாதவ் அபாரமாக பந்து வீசி 5 விக்கெட் வீழ்த்தினார். மேலும் ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்டும் முகேஷ் குமார் மற்றும் அர்ஷதிப் சிங் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தொடரை சமன் செய்தது. இந்த வெற்றியின் மூலம் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக டி20 போட்டிகளில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்திருக்கிறது.