இந்திய அணியின் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்திக்கு என்ன மாதிரி ரோல் கொடுக்கப்பட்டிருக்கிறது? அவரிடம் அணி நிர்வாகம் என்ன பேசி இருக்கிறது? என்பது குறித்து இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் கூறியிருக்கிறார்.
இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியில் அதிக விக்கெட் கைப்பற்றியவராக வருண் சக்கரவர்த்தி மொத்தம் ஒன்பது விக்கெட் கைப்பற்றி இருக்கிறார். தேவைப்படும் நேரங்களில் பவர் பிளேவில் ஒன்று முதல் இரண்டு ஓவர்கள் வீசுவதற்கு தயாராக இருப்பது சிறப்பான விஷயமாக அமைந்திருக்கிறது.
இதுகுறித்து மோர்னே மோர்கல் பேசும் பொழுது “எங்கள் அணியின் ஸ்டிரைக் பவுலர் வருண்தான். அதே சமயத்தில் அவர் தனி ஆள் கிடையாது என்று சொல்லி இருக்கிறோம். அவருக்கு உதவி செய்ய நான்கு பவுலர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அழுத்தத்தை உருவாக்குவார்கள். இவர் விக்கெட் கைப்பற்ற வேண்டும். அதே சமயத்தில் எதிரணியின் பார்ட்னர்ஷிப்பை நான்தான் உடைப்பேன் என நிறைய முயற்சிகளை இவர் செய்யக் கூடாது. இதுகுறித்தும் நாங்கள் அவரிடம் பேசியிருக்கிறோம்”
“இவரைச் சுற்றி நாங்கள் ஒரு சிறந்த பந்துவீச்சு குழுவை உருவாக்கி உள்ளோம் என்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். அதே சமயத்தில் வருண் எதிரணி பேட்ஸ்மேன் குறித்து நிறைய வீடியோ காட்சிகளை பார்த்து அலசல்களை செய்து கொண்டு வருகிறார். மேலும் எதிரணிகள் என்ன செய்யும் என்பதை முன்கூட்டியே கணிக்கிறார். அவர் இந்த விளையாட்டின் சிறந்த மாணவராக இருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.

