இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் இந்திய கிரிக்கெட் வாரியம் தங்களிடம் இருக்கும் பொருளாதார பலத்தை வைத்து தவறாக நடந்து கொள்வதாக குற்றம் சாட்டி இருந்தார். இந்திய அணி மற்ற நாட்டில் விளையாட முடியாது என்று சொன்னால் ஐசிசி உடனே மாற்று இடத்தை ஏற்பாடு செய்து தருவதாகவும், அதுவே மற்ற நாடுகள் சொன்னால் அவர்களை தண்டிப்பதாகவும் கூறியிருந்தார். மேலும் அதிகாரம் எப்போதும் வளர்ச்சிக்கானதாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதில் அளித்து பேசி உள்ள சுனில் கவாஸ்கர் கூறும் பொழுது ” முன்பு கிரிக்கெட்டில் ஆதிக்க சக்திகளாக இருந்தவர்களுக்கு தற்போது இந்திய கிரிக்கெட் அதிகாரம் மையமாக மாறுவது பிடிக்கவில்லை. எனவே அவர்கள் இந்தியாவுக்கு ஒரு நியாயமும் மற்றவர்களுக்கு ஒரு நியாயமும் செய்யப்படுவதாக பேசி வருகிறார்கள். ஆனால் உண்மையில் அவர்கள் புத்தியை பயன்படுத்தி நியாயமாக யோசித்துப் பார்க்க வேண்டும். இதற்கு முன்பு ஜிம்பாபேவில் நடைபெற்ற ஒரு உலகக்கோப்பை தொடருக்கு இங்கிலாந்தும்தான் செல்லவில்லை என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்”
“இந்தியா பாகிஸ்தான் சென்று விளையாடாது என்பது அறிவை பயன்படுத்தும் எல்லோருக்கும் தெரிந்த சாதாரணமான விஷயம். அதே சமயத்தில் நாங்கள் பாகிஸ்தான் செல்ல முடியாது என சாம்பியன்ஸ் அட்டவணை வெளியிடும் முன்பே தெரிவித்து விட்டோம். அடுத்து நாங்கள் நடுநிலையான இடத்தில் விளையாடினோம். கடைசி நேரத்தில் நாங்கள் எந்தவிதமான குழப்பத்தையும் ஏற்படுத்தவில்லை. ஆனால் பாகிஸ்தான் திடீரென இந்திய அணிக்கு எதிராக விளையாட மாட்டேன் என்று கூறி இருக்கிறது. இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது” என்று தெரிவித்திருக்கிறார்.

