நேற்று டி20 உலகக் கோப்பை தொடரில் நேபாள் அணி இங்கிலாந்து அணி மிகப்பெரிய பயத்தை உண்டாக்கி விட்டது. முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 184 ரன்கள் எடுக்க, தொடர்ந்து விளையாடிய நேபாள் அணி 180 ரன்கள் எடுத்து வெற்றிக்கு மிக அருகில் நெருங்கி ஆச்சரியப்படுத்தியது. கடைசி ஓவரின் 6 பந்துகளையும் யார்க்கராக வீசிய சாம் கரன் மிகப்பெரிய தோல்வியில் இருந்து இங்கிலாந்து அணியை காப்பாற்றினார். இந்த நிலையில் அவர் நேபாள் அணி குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார்.
இதுகுறித்து சாம் கரன் பேசும்போது ” நேற்றைய போட்டியில் வென்று நாங்கள் 2 புள்ளிகளை பெற்று விட்டோம். ஒருவேளை நாங்கள் வெற்றி பெற முடியாமல் போயிருந்தால் அது பயங்கரமானதாக இருந்திருக்கும். எங்களுடைய ட்ரெஸ்ஸிங் ரூம் நிச்சயம் சந்தோசமாக இருந்திருக்க முடியாது. நான் அந்த கடைசி ஓவரின் 6 பந்துகளையும் யார்க்கராக வீசுவேன் என கேப்டனிடம் கூறினேன். ஒருவேளை அப்படி என்னால் செய்ய முடியாவிட்டால் அந்த பழியை நானே ஏற்றுக் கொள்கிறேன் என்றும் சொல்லி இருந்தேன்”
“மேலும் அசோசியேட் கிரிக்கெட் நாடுகளை இனியும் நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. நேபாள அணி மிகச் சிறப்பான முறையில் விளையாடியிருந்தது. அவர்கள் வெற்றிக்கு மிக அருகில் வந்தார்கள். அவர்கள் கடைசி ஓவரில் வெறும் பத்து ரன்கள் மட்டுமே எடுக்க வேண்டிய இடத்தில் இருந்தார்கள். நேற்று அவர்கள் விளையாடிய விதத்தை பார்க்கும் பொழுது 2016 ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் எங்களுக்கு எதிராக கார்லோஸ் பிராத்வைட் நான்கு சிக்ஸர்கள் அடித்து போட்டியை வென்றது ஞாபகத்திற்கு வந்துவிட்டது” என்று கூறி இருக்கிறார்.

