ஆர்சிபி அணியின் புதிய கேப்டனாக இளம் வீரர் ரஜத் பட்டிதர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 3 சீசன்களாக ஆர்சிபி அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த டூ பிளசிஸ், இம்முறை ஆர்சிபி அணியால் ஏலத்தில் வாங்கப்படவில்லை. இதனால் மீண்டும் விராட் கோலியே கேப்டனாக நியமனம் செய்யப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்பட்டு வந்தது.
ஏனென்றால் விராட் கோலியை தவிர்த்து ஆர்சிபி அணியில் இருக்கும் வேறு வீரருக்கும் கேப்டன்சி அனுபவம் இல்லை. இந்த நிலையில் ஆச்சரியமளிக்கும் வகையில் ரஜத் பட்டிதர் கேப்டனாக நியமித்து அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
ரஜத் பட்டிதரின் அனுபவம்
முதல்முறையாக சர்வதேச அனுபவம் அதிகம் பெறாத ஒருவரை நம்பி ஆர்சிபி அணி கேப்டன்சியை கொடுத்துள்ளது. ஆர்சிபி அணிக்காக 2 சீசன்களில் சிறப்பாக விளையாடியுள்ள ரஜத் பட்டிதர், அண்மையில் நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி தொடரில் மத்திய பிரதேச அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டிருந்தார். அந்த அணியை இறுதிப்போட்டி வரை அழைத்து வந்தார்.
இதனிடையே ரஜத் பட்டிதர் ஆர்சிபி அணியின் கேப்டனாக நியமனம் செய்யப்பட 3 காரணங்கள் இருந்ததாக அந்த அணியின் பயிற்சியாளர் ஆண்டி பிளவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆண்டி பிளவர் பேசும் போது, ரஜத் பட்டிதர் கேப்டனாக நியமிக்கப்பட 3 காரணங்கள் உள்ளன. அதில் முதல் காரணம் அவரிடம் இருக்கும் அமைதிதான். அதேபோல் எளிமையாக இருப்பவர்.
அதாவது திட்டங்களை எளிமையாக புரிந்து கொண்டு செயல்படுத்த முயற்சிப்பார். அந்த குணம் ஐபிஎல் தொடருக்கு மிகவும் முக்கியம். 2வது காரணம் ரஜத் பட்டிதர் எப்போதும் அவரை சுற்றியுள்ள மனிதர்களின் நலனில் அக்கறை கொண்டவர். அப்படியான குணம்தான் சக வீரர்களிடம் இருந்து அவருக்கு மரியாதையை கொடுக்கும். ஒரு தலைவனாக மற்றவர்கள் பின் தொடர்வார்கள்.
ரஜத் பட்டிதரின் முதிர்ச்சி
3வது காரணம் ரஜத் பட்டிதரிடம் இருக்கும் பிடிவாத குணம். அவரின் ஆட்டத்திலேயே அதனை அனைவராலும் காண முடியும். விராட் கோலியிடம் இதுகுறித்து ஆலோசிக்கும் போது, ரஜத் பட்டிதரிடம் இருக்கும் முதிர்ச்சி மிகச்சிறந்த ஒன்றாக அமைந்தது. அதேபோல் அடுத்த சீசனில் ஆர்சிபி அணிக்காக விளையாடுவதற்கு அதிக ஆர்வமுடன் இருக்கிறார்.
கடந்த சீசனில் ஆர்சிபி அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கு ரஜத் பட்டிதரின் ஆட்டமும் முக்கியமான காரணம். அந்த ஆட்டமும், அனுபவமும் ரஜத் பட்டிதர் மீதான மரியாதையை அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளார். இதனால் ரஜத் பட்டிதர் ஆர்சிபி அணியின் நீண்ட நாள் கனவான ஐபிஎல் கோப்பையை வென்று கொடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

