இந்திய அணியின் ஆல் ரவுண்டர் நட்சத்திரமாக ஜொலித்த யுவராஜ் சிங் 2011ம் ஆண்டு இந்திய அணி ஒரு நாள் உலகக் கோப்பையை கைப்பற்றுவதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்தார். ஆனால் அதற்குப் பிறகு புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட யுவராஜ் சிங், அதிலிருந்து மீண்டு வந்து அணியில் இடம் பிடித்து விளையாடினாலும் பெரிய அளவில் சோபிக்க முடியவில்லை. இந்த சூழ்நிலையில் இந்திய அணியில் தனக்கு கிடைத்த மரியாதை குறித்து யுவராஜ் சிங் சானியா மிர்சாவுடன் ஆன கலந்துரையாடலில் சில முக்கிய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “நான் ஒரு கட்டத்திற்கு பிறகு விளையாட்டை ரசிப்பதை நிறுத்தி விட்டேன். எனக்கு பிடிக்காத விஷயத்தை நான் எதற்காக செய்ய வேண்டும் என்கிற உள்ளுணர்வு எனக்குள் ஓடிக் கொண்டிருந்தது. எனக்கு இந்திய அணியில் போதுமான ஆதரவு இல்லை என்று உணர்ந்தேன். அதேபோல எனக்கு போதிய அளவு மரியாதை இல்லை எனவும் தோன்றியது. மரியாதை மற்றும் ஆதரவு இல்லாத இடத்தில் நான் எதற்காக இருக்க வேண்டும்?
யாருக்காக எதை நிரூபிக்க நான் விளையாட வேண்டும் என்று தோன்றியது. மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் நான் மிகவும் சோர்வடைந்திருந்தேன். அது எனக்கு மிகவும் வலியை கொடுத்தது. ஆனால் என்று நான் கிரிக்கெட்டை விட்டு விலகினேனோ அப்போதுதான் நான் மீண்டும் பழைய யுவராஜாக நானாக உணர்ந்தேன்” என்று உருக்கமாக பேசியிருக்கிறார்.

