ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் அபாரமாக விளையாடி வந்த நிலையில் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட போது மோசமான ரன் அவுட் ஆகி 82 ரன்களில் ஆட்டம் இழந்தார். ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ள நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டியில் இரு அணிகளும் வெற்றிக்காக தீவிரமாக உழைத்து வருகின்றனர்.
ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 474 ரன்கள் குவிக்க இந்திய அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் தடுமாறியது. கேப்டன் ரோகித் சர்மா மூன்று ரன்களிலும், கே எல் ராகுல் 24 ரன்களிலும் ஆட்டம் இழக்க மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஜெய்ஸ்வால் மற்றும் விராட் கோலி ஆகியோர் 12 ரன்கள் சேர்த்து அபாரமாக விளையாடி வந்தனர்.
இந்த ஜோடி பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய அணியை வெற்றி பெற வைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் தான் அந்த சம்பவம் நடைபெற்றது. ஜெய்ஸ்வால் 82 ரன்கள் எடுத்து இருந்தபோது அவர் அடித்த பந்து கம்மின்ஸ் கைக்கு சென்றது. எனினும் ரன் ஓடிவிடலாம் என்ற நம்பிக்கையில் ஜெய்ஸ்வால் வந்தார். ஆனால் விராட் கோலி ஜெய்ஸ்வாலை பின்னால் திரும்பி கொண்டு கம்மின்சை பார்த்தார்.
அதற்குள் ஜெய்ஷ்வால் எதிர்முனைக்கு வர விராட் கோலி ரன் ஓடாமல் நின்று விட்டார். இதனால் ஜெய்ஸ்வால் துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். இதனை அடுத்து அடுத்த சில நிமிடங்களில் விராட் கோலி 36 ரன்களில் ஆட்டம் இழந்தார். இந்த நிலையில் இந்த ரன் அவுட்டுக்கு காரணம் யார் என்று சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி வருகின்றனர்.
இந்த ரன் அவுட்டுக்கு ஜெய்ஸ்வால்தான் காரணம் என்று ஒரு தரப்பினரும், இன்னொரு தரப்பினர் விராட் கோலி தான் காரணம் என்றும் விமர்சித்து வருகின்றனர். இது குறித்து நேரலையில் பேசும்போது கூட விராட் கோலி மீது எந்த தவறும் இல்லை. ஜெய்ஸ்வால்தான் இந்த விஷயத்தில் தவறு செய்துவிட்டார் என இர்பான் பதான் பேசினார்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சஞ்சய் மஞ்சுரேக்கர், பள்ளி சிறுவன் போல் விராட் கோலி தவறு செய்து விட்டதாக சாடி இருக்கிறார். இரண்டாவது நாள் ஆட்டநேரம் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்துள்ளது. இது ஆஸ்திரேலிய அணியை விட 310 ரன்கள் குறைவாகும். பாலோ ஆனை தவிர்க்க வேண்டும் என்றால் இந்திய அணி மேலும் 111 ரன்கள் அடிக்க வேண்டும்.

