தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி மூன்று போட்டிகளை கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இரண்டு அணிகளுக்கும் இடையேயான முதலாவது போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் இரண்டாவது டி20 போட்டி இன்று தொடங்கியது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியின் துவக்க வீரர்கள் ஜெய்ஸ்வால் மற்றும் கில் இருவரும் ரன்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டம் இழந்து அதிர்ச்சி அளித்தனர். இதனைத் தொடர்ந்து கேப்டன் சூர்யா குமார் யாதவ் மற்றும் திலக் வர்மா இருவரும் இணைந்து இந்திய அணியை ஆரம்பகட்ட சரிவிலிருந்து மீட்டனர்.
அதிரடியாக ஆடிய திலக் வர்மா 20 பந்துகளில்1 சிக்ஸர் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 29 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதனைத் தொடர்ந்து அதிரடி வீரர் ரிங்கு சிங் கேப்டன் சூரியகுமார் யாதவ் உடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக ஆடி இந்திய அணிக்கு அருமையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது. வழக்கம்போல் அதிரடியாக விளையாடிய சூரியகுமார் யாதவ் டி20 போட்டிகளில் மற்றும் ஒரு அரை சதத்தை நிறைவு செய்தார் .
இவர்கள் இருவரும் இணைந்து நான்காவது விக்கெட்டுக்கு 70 ரன்கள் சேர்த்த நிலையில் 36 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 5 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் எடுத்த சூரியகுமார் யாதவ் அவுட் ஆனார். கேப்டன் ஆட்டம் இழந்தாலும் மறுமுனையில் ரிங்கு சிங் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதிரடியாக விளையாடிய அவர் டி20 போட்டிகளில் தனது முதல் அரை சத்தத்தையும் நிறைவு செய்தார். இவரது ஆட்டத்தால் இந்திய அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.
மறுமுனையில் ஜித்தேஷ் சர்மா ஒரு ரன்னில் அவுட் ஆனார். இறுதிக்கட்ட ஓவர்களில் தனது வழக்கமான அதிரடியை தொடர்ந்தார் ரிங்கு சிங். ஆட்டத்தின் 19 ஆவது ஓவரை தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் மார்க்ரம் வீசினார். அந்த ஓவரின் கடைசி இரண்டு பந்துகளை இமாலய சிக்ஸர்களாக விலாசி இந்திய அணி 180 ரன்கள் கடக்க உதவினார் ரிங்கு சிங். அவர் அடித்த ஒரு சிக்சரில் மீடியா அறையின் கண்ணாடி உடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது .
மறுமுனையில் ரவீந்திர ஜடேஜா 14 பந்துகளில் ஒரு சிக்சர் மற்றும் ஒரு பவுண்டரியுடன் 19 ரன்கள் எடுத்து இறுதி ஓவரில் ஆட்டம் இழந்தார். இவரைத் தொடர்ந்து அர்ஷதிப் சிங் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். இந்நிலையில் மழை பெய்ததால் போட்டி நிறுத்தப்பட்டது. இந்தியா 19.3 ஓவர்களில் 183 ரன்களுக்கு 7 விக்கெட் இழந்திருந்தது.
இந்தா வச்சிக்கோ back to back 6's
— Star Sports Tamil (@StarSportsTamil) December 12, 2023
தொடர்ந்து காணுங்கள் #SAvIND | 2nd T20I | Star Sports தமிழ் & Disney+Hotstar-ல்#BelieveInBlue #StarSports #Cricket pic.twitter.com/iuOP0vkgkP
ரிங்கு சிங் 39 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 9 பவுண்டர்களுடன் 68 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்றார். இவரது ஸ்ட்ரைக் ரேட் 174 ஆகும். இவருடன் முகமது சிராஜ் ரன் எதுவும் எடுக்காமல் இருந்தார். ரிங்கு சிங் அதிரடியான சிக்ஸர்களின் வீடியோ இந்த பதிவுடன் இணைக்கப்பட்டு இருக்கிறது. மழை நீண்ட நேரம் பெய்ததால் இந்திய அணியின் இன்னிங்ஸ் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து டக்வேர்த் லிவீஸ் விதிப்படி தென்னாப்பிரிக்க அணிக்கு 15 ஓவர்களில் 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.