வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய ஏ அணி தனது முதல் போட்டியில் ஐக்கிய அரபு அமீரக அணியை எதிர்த்து களமிறங்கியது. முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 297 ரன்களை குவித்தது. சிறப்பாக ஆடிய வைபவ் சூர்யவன்ஷி 42 பந்துகளில் 15 சிக்ஸ், 11 பவுண்டரி உட்பட 144 ரன்களை விளாசி தள்ளினார்.
அதிலும் 17 பந்துகளில் அரைசதம் அடித்த அவர், அடுத்த 15 பந்துகளில் சதமடித்து புதிய வரலாறு படைத்துள்ளார். அதேபோல் ஒரே ஓவரில் 29 ரன்களையும் வைபவ் சூர்யவன்ஷி அடித்தார். இதனால் வைபவ் சூர்யவன்ஷியின் இன்னிங்ஸ் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குழந்தைகள் தினத்தன்று 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி இப்படியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இதனால் சோசியல் மீடியாவில் ரசிகர்கள் பாஸ் பேபி என்று வைபவ் சூர்யவன்ஷியை கொண்டாடி வருகின்றனர். ஏற்கனவே ஐபிஎல் தொடரில் சதம் அடித்த வைபவ் சூர்யவன்ஷி, இந்தியா ஏ அணிக்காக சதம் விளாசி தள்ளினார். அதன்பின் யூத் ஒருநாள் கிரிக்கெட்டில் சதம் அடித்த அவர், தற்போது டி20 கிரிக்கெட்டில் இந்திய ஏ அணிக்காக சதமடித்து சாதித்துள்ளார்.

