உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா அணியை எதிர்த்து தென்னாப்பிரிக்கா அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 138 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது.
மார்க்ரம் – பவுமா கூட்டணி
இதன்பின் 2வது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணி 207 ரன்களை குவித்ததோடு, வெற்றி இலக்காக 282 ரன்களை நிர்ணயித்தது. இதன்பின் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணியில் ரிக்கல்டன் 6 ரன்களிலும், முல்டர் 27 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் சீனியர் வீரர்களான மார்க்ரம் – பவுமா கூட்டணி இணைந்தது.
இதில் பவுமா களமிறங்கிய போது ஸ்டார்க் வீசிய பந்தில் எட்ஜாகி கேட்ச் சென்றது. அந்த கேட்சை ஸ்டீவ் ஸ்மித் கோட்டைவிட்டார். இதன்பின் பவுமாவின் ஆட்டம் உச்சத்திற்கு சென்றது. அதிக டாட் பால்களை விளையாடாமல், விரைவாக ரன் குவிக்க தொடங்கினார். இதனிடையே அவருக்கு ஹேம்ஸ்ட்ரிங் காயம் ஏற்பட்டது. இதனால் பவுமாவால் ரன்களை ஓடி எடுக்க முடியவில்லை.
காயத்திலும் அசராத பவுமா
இதனால் பவுமா உடனடியாக ஓய்வறை செல்வார் என்று சொல்லப்பட்ட போது, களம் விட்டு வெளியேற மாட்டேன் என்பதில் பிடிவாதமாக இருந்தார். காயம் ஏற்பட்ட போதும், 2 ரன்களை அவரால் ஓட முடிந்தது. எங்கெல்லாம் 2 ரன்களை எடுக்க முடியுமோ, அங்கெல்லாம் ஓடி ஓடி ரன்களை சேர்த்தார். தேவைக்கேற்ப பவுண்டரியை விளாசினார்.
சிறப்பாக ஆடிய பவுமா அரைசதம் விளாசியதன் மூலமாக தென்னாப்பிரிக்கா அணியின் ஓய்வறையில் அமைதியை நிலைநாட்டினார் என்றே சொல்ல வேண்டும். கடைசி வரை களத்தில் இருந்த தென்னாப்பிரிக்கா கேப்டன் பவுமா 121 பந்துகளில் 5 பவுண்டரிகள் உட்பட 65 ரன்களுடன் களத்தில் இருக்கிறார். இதனால் 4வது நாளில் முழுமையாக களத்தில் இருந்து பவுமா அணியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்று ரசிகர்கள் வேண்டி வருகின்றனர். காயத்தின் போது களம்விட்டு அகலாமல் தைரியமாக நின்ற பவுமாவுக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

