பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சக்லைன் முஸ்டாக் இந்திய முன்னாள் வீரர்கள் புத்தியோடு பேசாமல் வெறுப்பை பரப்பி வருகிறார்கள் என்று கடுமையான முறையில் விமர்சனம் செய்திருக்கிறார். மேலும் இந்தியா பாகிஸ்தான் அணிகள் இனி மோதிக்கொண்டாலும் இந்திய வீரர்களிடமிருந்து பழைய விளையாட்டு உணர்வையும் நட்பு உணர்வையும் பார்க்க முடியாது என்றும் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் பேசும் பொழுது “இனி இந்தியா பாகிஸ்தான் போட்டிகளில் இந்திய தரப்பிலிருந்து நாம் விளையாட்டு உணர்வையும் நட்பையும் பார்க்க முடியாது. இந்திய பக்கத்தில் இருந்து அவர்கள் இதை விரும்புவதில்லை. அவர்கள் தொடர்ந்து இப்படியே இருந்து அவர்களது அரசியலை பலமாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள். எனவே அவர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் நட்போடு நடந்து கொள்ள மாட்டார்கள். எங்கள் காலத்தோடு இரு அணி வீரர்களுக்குமான அன்பு முடிவுக்கு வந்துவிட்டது”
“மேலும் அரசியல்வாதிகள் தங்களின் அரசியலுக்காக இப்படி வெறுப்பை பரப்புகிறார்கள். ஆனால் இந்திய நட்சத்திரம் முன்னாள் வீரர்களும் இதே முறையில்தான் வெறுப்பை பரப்பி வருகிறார்கள். அவர்கள் புத்தியோடு பேசுவது கிடையாது. எல்லைக்கு அந்த பக்கத்திலிருந்து இன்னும் கொஞ்சம் பொறுப்புணர்வோடு பேச்சுக்களை முன்னாள் வீரர்கள் வைத்துக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு இந்த விளையாட்டின் நோக்கம் என்னவென்றே புரியாமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்த விளையாட்டு அமைதி மற்றும் ஒற்றுமைக்கானது என்று அவர்கள் உணர வேண்டும்” எனக் கூறியிருக்கிறார்.

