நடப்பு உலக கோப்பை தொடரின் இருபதாவது போட்டியில் இன்று தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியின் மும்பை வான்கடே மைதானத்தில் வைத்து நடைபெற்றது. இது மும்பையில் நடைபெறும் முதல் போட்டியாகும். இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இங்கிலாந்து அணி தொடர் தோல்விகளால் ஷாம் கரண் மற்றும் லிவிங்ஸ்டன் ஆகியோர் நீக்கப்பட்டு அட்கின்சன் மற்றும் டேவிட் வில்லி ஆகியோர் சேர்க்கப்பட்டிருந்தனர். இந்தப் போட்டியில் முதலில் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணியின் துவக்க வீரர் டிக்காக் 4 ரன்களில் ஆட்டம் இழந்தார். இதனைத் தொடர்ந்து ஹென்றிக்ஸ் மற்றும் வாண்டர் டுசன் ஆகியோர் இரண்டாவது விக்கெட்க்கு சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
இவர்கள் இருவரும் இரண்டாவது விக்கெட்டிற்கு 121 ரன்கள் சேர்த்தனர். மிகச் சிறப்பாக ஆடிய வாண்டர் டுசன் 61 பந்துகளில் 8 பௌண்டரிகளுடன் 60 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதனைத் தொடர்ந்து இவருடன் சிறப்பாக ஆடிய ஹென்றிக்ஸ் 75 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 9 பவுண்டரிகளுடன் 85 ரன்கள் ஆட்டம் இழந்தார். இவருடன் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த எய்டன் மார்க்ரம் 42 ரன்களிலும் மில்லர் 5 ரன்களிலும் ஆட்டம் இழக்க தென் ஆப்பிரிக்கா 243 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகள் இழந்திருந்தது. அப்போது ஹென்றிக் கிளாசனுடன் ஜோடி சேர்ந்தார் யான்சன்.
இந்த ஜோடி மிகச் சிறப்பான அதிரடி ஆட்டத்தை மேற்கொண்டு தென்னாப்பிரிக்கா அணி மிகப்பெரிய இலக்கை எட்ட உதவியினர். இந்த ஜோடி ஆறாவது விக்கெட்டுக்கு 74 பந்துகளில் 151 ரன்கள் சேர்த்து இங்கிலாந்து அணியை போட்டியிலிருந்து விரட்டியது. மிகச் சிறப்பாக விளையாடிய க்ளாசன் ஒரு நாள் போட்டிகளில் தனது நான்காவது சதத்தையும் உலகக் கோப்பையில் தனது முதல் சதத்தையும் பதிவு செய்தார். இவருடன் விளையாடிய யான்சன் ஒரு நாள் போட்டி மற்றும் உலகக் கோப்பையில் தனது முதல் அரை சதத்தை பதிவு செய்தார்.
67 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 12 பவுண்டரிகளுடன் 109 ரன்களில் அவுட் ஆனார் கிளாசன். 50 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 6 விக்கெட்டுகளை இழந்து 399 ரன்கள் எடுத்தது, அதிரடியாக விளையாடிய மார்க்கோ யான்சன் 42 பந்துகளில் 75 ரன்கள் உடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார் . இதில் ஆறு சிக்ஸர்களும் மூன்று பவுண்டரிகளும் அடங்கும். கிளாஸசன் மற்றும் ஜான்சன் இருவரும் சேர்ந்து கடைசி 10 ஓவர்களில் 143 ரன்கள் சேர்த்தனர். குறிப்பாக கடைசி ஏழு ஓவர்களில் 112 ரன்கள் எடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து நான் ஒரு ரன்கள் என்ற இமாலய வெற்றி இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 22 ஓவர்களில் 170 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது . அந்த அணியில் அதிகபட்சமாக மார்க் வுட் 42 ரன்களும் அட்கின்சன் 35 ரன்களும் எடுத்தனர். தென்னாப்பிரிக்க அணியின் பந்துவீச்சில் கோட்சி மூன்று விக்கெட்டுகளும் ரபாடா இங்கிடி மற்றும் யான்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். இதன் மூலம் தென்னாப்பிரிக்க அணி 229 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி உலகக் கோப்பையில் தனது மூன்றாவது வெற்றியை பதிவு செய்திருக்கிறது.
மறுபுறம் இங்கிலாந்து அணி இந்த உலக கோப்பையில் தனது மூன்றாவது தோல்வியை சந்தித்துள்ளது. இதுவரை விளையாடியிருக்கும் நான்கு போட்டிகளில் இங்கிலாந்து அணி பங்களாதேஷ் அணியுடன் மட்டும் வெற்றி பெற்று இருக்கிறது. நியூசிலாந்து ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்க அணிகளிடம் தோல்வியை சந்தித்துள்ளது இங்கிலாந்து. இனி அந்த அணி விளையாட இருக்கும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அரை இறுதி செல்வதற்கு ஏதேனும் வாய்ப்புகள் இருக்கும். இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து அணி தற்போது புள்ளிகள் பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது.