நேற்று சிஎஸ்கே அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கான காரணங்கள் குறித்து கேப்டன் ருதுராஜ் பேசியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும் பொழுது “நேற்று ஆடுகளம் கொஞ்சம் கடினமாக இருந்தது. குறிப்பாக ஆச்சர் மற்றும் பர்கர் சிறப்பான அளவில் பந்து வீசினார்கள். அந்த நேரத்தில் அவர்களை எதிர்த்து விளையாடுவதற்கு கடினமாக இருந்தது. அங்கிருந்து தான் பிரச்சனை ஆரம்பித்தது”
“தற்போது இம்பேக்ட் பிளேயர் விதி இருக்கின்ற காரணத்தினால் எவ்வளவு ரன்கள் எடுத்தால் சரியாக இருக்கும் என்று தெரியவில்லை. எனவே நாம் ரன்கள் எடுப்பதற்கு தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டியதாக உள்ளது. எங்களால் 160 ரன்கள் எடுத்திருக்க முடியும். ஆனால் அதை வைத்து வெல்ல முடியுமா?”
“முதல் போட்டியில் நிறைய தவறுகள் செய்து தோல்வி அடைந்தது நல்ல விஷயம்தான். இது முதல் போட்டி என்பதால் அணியில் உள்ள இளம் வீரர்களுக்கு கொஞ்சம் பதட்டம் இருந்திருக்கும். தற்போது அந்தப் பதட்டம் ஒரு போட்டியின் மூலமாக போய் இருக்கும். எனவே அடுத்து நன்றாக விளையாடுவார்கள். அடுத்து முன்னேற்றம் மட்டுமே கிடைக்கும் என்று நம்புகிறேன்” எனக் கூறியிருக்கிறார்.

