இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரிஷப் பண்ட் விபத்தில் இருந்து எவ்வாறு மீண்டு வந்தார் என்பதை அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் கூறியிருக்கிறார்.
ரிஷப் பந்த் 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் டெல்லி நோக்கி சென்று கொண்டிருந்த போது கார் விபத்தில் சிக்கினார். சம்பவ இடத்திலேயே கார் தீப்பிடித்து எரிந்த நிலையில், ரிஷப் பண்ட் அதிர்ஷ்டவசமாக சுற்றி இருந்தவர்களால் காப்பாற்றப்பட்டு உயிர் தப்பினார்.
சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பண்ட் மீண்டும் உடல்நிலை தேறி வருவாரா? என்றும் பழையபடி அவரால் கிரிக்கெட் விளையாட முடியுமா? என்று ரசிகர்களாலும், கிரிக்கெட் வல்லுனர்களாலும் கேள்வி எழுந்தது. ஆனால் மனவலிமையை தளர விடாத ரிஷப் பந்த் ஒரே வருடத்தில் எழுந்து நடந்ததோடு அதற்கு அடுத்த மூன்று மாதங்களிலேயே உடல் தகுதிக்கான என்சிஏ சான்றிதழையும் பெற்றார்.
டெல்லி அணிக்காக மீண்டும் களத்தில் இறங்கி விளையாட உள்ள பந்த், அடுத்து வர உள்ள டி20 உலக கோப்பைக்காண தேர்வு பட்டியலில் நிச்சயம் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது டெல்லி அணியின் பயிற்சி முகாமில் பயிற்சி பெற்று வரும் ரிஷப் பந்த் தீவிர பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் பிசிசிஐ தரப்பில் ரிஷப் பண்டின் கம்பேக் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் ரிஷப் பண்ட்டிற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர் தின்ஷா பர்திவாலா பல்வேறு தகவல்களை தெரிவித்து இருக்கிறார். அதில் அவர் கூறியதாவது
“ரிஷப் பண்ட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது அவரது தாய் பண்ட்டால் பழையபடி எழுந்து நடக்க முடியுமா? என்றுதான் எங்களிடம் கேட்டுக் கொண்டே இருந்தார். எங்களால் நிச்சயம் அவரை பழைய நிலைக்கு கொண்டு வர முடியும் என்று உறுதி அளித்தோம். அவரை கிரிக்கெட் களத்திற்கு கொண்டு வருவது எங்களின் முக்கிய இலக்காக இருந்தது. சராசரியாக நடக்க 18 மாதங்கள் ஆகும் நிலையில், பண்ட் 12 மாதங்களில் நடப்பேன் என்று கூறினார்.
அவரது மனநிலை சரியாக இருக்க வேண்டும். ஏனென்றால் விபத்திற்கு பின் அவரால் எந்த வேலையும் செய்ய முடியாது. மருத்துவமனை பெட்டிலேயே படுத்திருக்க வேண்டும். அவரால் டாய்லெட் கூட எழுந்து போக முடியாத நிலை இருந்தது. சாதாரண வேலையை செய்வதற்கு கூட அடுத்தவரின் உதவியை நாட வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் இருந்தார். அவரது கடினமான காலகட்டத்தில் இருந்து தற்போது மீண்டு வந்து கிரிக்கெட் களத்திற்குள் நுழைந்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது” என்று கூறி இருக்கிறார்.
டெல்லி அணியின் கேப்டனாக இருந்த பந்த் தற்போது ஒரு பேட்ஸ்மேன் ஆகவும், கீப்பர் ஆகவும் மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. எனவே ஐபிஎல்லில் விளையாடி இவரது உடல் தகுதியைப் பொறுத்து வரும் டி20 உலக கோப்பையில் தேர்வு செய்யப்படக் கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இவர் மீண்டும் டி20 உலகக் கோப்பையில் விளையாட வேண்டும் என்று இந்திய ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து இருக்கின்றனர்.
